கராச்சி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஓய்வு பெறுவதற்கு ஒருமுறையாவது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வர வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கோரியுள்ளார். பாகிஸ்தானில் விராட் கோலிக்கு அளிக்கும் மரியாதையும், அன்பும் வேறு எந்த வீரருக்கும் கிடைக்காது என்றும் அக்மல் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூர் மைதானத்தில் மட்டும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாதுகாப்பு காரணங்களை சொல்லக் கூடாது என்பதற்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஒரே மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாடுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் இது பிசிசிஐ மட்டும் அனுமதியளிக்கும் விவகாரம் அல்ல.
மத்திய அரசு அனுமதியளித்தால் மட்டுமே இந்திய அணியால் பயணிக்க முடியும். இந்திய அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு நடந்த தொடரில் தான் பாகிஸ்தானுக்கு பயணித்து விளையாடியது. இதனிடையே இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணித்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வர வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா டிசம்பர் மாதம் பொறுப்பேற்கவுள்ளார். இதனால் இந்திய அணி பாகிஸ்தான் பயணித்து விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. ஆசிய கோப்பை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டாலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளையும் சமாளிப்பது எளிதான விஷயமல்ல. ஏனென்றால் இந்திய அணியுடன் விளையாடுவதற்காக மட்டும் மற்ற நாடுகளின் வீரர்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஒருமுறை பாகிஸ்தானுக்கு வர வேண்டும். சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் பயணித்து விளையாடி வரும் இருவரையும் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் பேட்டிங் காரணமாக இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஆனால் பாகிஸ்தானில் விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்கு இருக்கும் மாஸ் அனைத்தையும் எளிதாக ஓவர் டேக் செய்துவிடும். இங்கு விராட் கோலி தான் பலருக்கும் ரோல்-மாடல், ரோஹித் சர்மா டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டன், உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா தான். இவர்கள் மூவரும் இங்கு வந்தால், பாகிஸ்தான் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. யு19 நாட்களில் விராட் கோலி சில முறை பாகிஸ்தான் பயணித்துள்ளார் என்று நினைக்கிறேன்.
ஆனால் இப்போது விராட் கோலி வந்தால், அனைவரும் மிரண்டுவிடுவார்கள். பாகிஸ்தான் மண்ணில் விராட் கோலியை விட யாரும் பிரபலமான கிரிக்கெட் வீரர் கிடையாது. சொந்த வீரர்களை விடவும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ராவிற்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.