மும்பை: விஜய் ஹசாரே டிராபி 2025-26 லீக் போட்டிகளின் ஒளிபரப்பு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். கடந்த புதன்கிழமை தொடங்கிய இத்தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் களமிறங்கியும், ஒரு சில போட்டிகள் மட்டுமே ஒளிபரப்பானது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
T20I மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித், விராட்டை மீண்டும் களத்தில் காண இது அரிய வாய்ப்பாக அமைந்தது. இது குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில், "ரசிகர்கள் 'இது என்ன நியாயம்?' எனக் கேட்கின்றனர். இந்த போட்டிகளை எலான் மஸ்க் மட்டுமே 'எக்ஸ்' தளத்தில் ஒளிபரப்ப முடியும். ரோஹித், விராட் இருவரையும் அனைவரும் பின்தொடர்வர்," என்றார்.

"அவர்கள் களத்தில் இறங்கி, நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டுடன் அபாரமாக ரன் குவித்துள்ளனர். இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் விளையாடும்போது போட்டிகள் இன்னும் உற்சாகமாகின்றன," என பாராட்டினார். இத்தொடரில் ரோஹித் 94 பந்துகளில் 155, விராட் 101 பந்துகளில் 131 ரன் விளாசினர். விராட்டின் சதம் டெல்லியை ஆந்திரப் பிரதேசத்திற்கு எதிராக வெற்றிக்கு வழிநடத்தியது.
ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், ஒளிபரப்பு முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டு கடைசி நிமிடத்தில் மாற்ற முடியாது என அஸ்வின் விளக்கினார். "ரோஹித், விராட் விளையாடுவதை அனைவரும் பார்க்க விரும்புவது உண்மைதான். ஆனால், ஒளிபரப்பாளர்கள் இந்த தகவலை எவ்வளவு முன்னதாகப் பெற்றார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்," என்றார்.
மேலும் அவர், "சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டி அட்டவணைகள் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. பிசிசிஐயும் ஒளிபரப்பாளர்களும், ஒளிபரப்ப எளிதான இடங்கள், நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டிய போட்டிகளை முன்னதாகவே முடிவெடுக்கும். ரோஹித், விராட் விளையாடுவார்கள் என்ற தகவல் இருந்தும், அது உறுதிப்படுத்தப்படும்போது கடைசி நிமிட மாற்றங்கள் சாத்தியமில்லை," என அவர் கூறினார்.