மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் ஆன ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் முக்கியத்துவத்தை குறைக்கவே கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தா தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் இதன் பின்னணியில் சில முக்கிய காரணங்களும் உள்ளன.
தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து தலைமை பொறுப்பை ஏற்க சரியான வீரர்கள் இல்லை. பும்ரா மட்டுமே அதற்கு சரியான நபராக இருக்கிறார். ஆனால், அவரும் வேகப் பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு அதிக பணிச்சுமை அளிக்க முடியாது. அந்த வகையில் அடுத்த கேப்டன் இன்னும் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. தோனி தான் கேப்டன் பதவியில் இருந்து விலகி விராட் கோலியை கேப்டன் ஆக்கியதோடு, அணியில் அவருடன் பல ஆண்டுகள் ஒன்றாக ஆடி, அவரை வழி நடத்தினார். இப்போது அதுபோன்ற நிலைமை இல்லை.

ஹர்திக் பாண்டியாவை டி20 அணியின் கேப்டனாக நியமித்தாலும் அவரால் ஒருநாள் அணியின் கேப்டனாகவோ. டெஸ்ட் அணியின் கேப்டனாகவோ செயல்பட முடியாது. இனி டி20 அணியை தனியாகவும், ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியை தனியாகவும் பிரிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது 37 வயதாகும் ரோஹித் சர்மா நிச்சயமாக சாம்பியன்ஸ் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. அடுத்து விராட் கோலி இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. இருதரப்பு ஒருநாள் தொடர்களில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும், முக்கியமான ஒருநாள் தொடர்களான சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் போட்டி உலகக்கோப்பை ஆகியவற்றில் மட்டுமே பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.
எனவே இவர்கள் இருவருக்கும் மாற்றாக சிறந்த வீரர்களை கண்டறிய வேண்டும். ரோஹித் சர்மாவுக்கு அடுத்து அணியை வழிநடத்தும் ஒரு சிறந்த கேப்டனை கண்டறிய வேண்டும். அதே சமயம், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் ஆதிக்கம் செலுத்தினால் இளம் வீரர்களால் மேலே எழுந்து வர முடியாது. எனவே, விராட் கோழி மற்றும் ரோஹித் சர்மாவை ஒருவித கட்டுப்பாட்டோடு வைக்கவும் கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக இருப்பார்.
உதாரணத்திற்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக வரப் போகிறார் என்ற சூழலில், அதற்கு முன்பே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். பிசிசிஐ, டி20 போட்டிகளுக்கு தனி அணியை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. 2022 டி20 உலகக் கோப்பை முடிவிலும் அதே கருத்தை பிசிசிஐ முன்வைத்திருந்தது.
ஆனால், அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. எனவே, மீண்டும் ரோஹித் சர்மா, விராட் கோலி உதவியை நாடியது. அவர்களும் உலகக் கோப்பை வென்று கொடுத்தார்கள். ஆனால், இனியும் அவர்களை சார்ந்தே இருக்க முடியாது. இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்கும் போது கடினமான ஒரு நபர் பயிற்சியாளராக இருப்பது அவசியம் என்பதை உணர்ந்து பிசிசிஐ கவுதம் கம்பீரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.