தேர்வுக்குழு மீது குற்றச்சாட்டு
கடந்த 1961 முதல் 1976 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் பரோக் இன்ஜினீயர், 46 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.
பரோக் குற்றச்சாட்டு
எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினருக்கு அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை என்றும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ள பரோக், அது ஒரு மிக்கி மவுஸ் தேர்வுக்குழு என்றும் கேலி பேசியிருந்தார்.
அனுஷ்கா பெயரை பயன்படுத்திய பரோக்
உலகக் கோப்பை தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது, அதைக்காண வந்த பிரபல பாலிவுட் நடிகையும் விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவிற்கு எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான குழுவினர் டீ கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
விராத் கோலி ஆவேசம்
எம்எஸ்கே பிரசாத் மற்றும் அனுஷ்கா குறித்த பரோக் இன்ஜினீயரின் இந்த விமர்சனம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போது இந்த பேச்சு குறித்து விராத் கோலி தன்னுடைய மவுனத்தை கலைத்துள்ளார்.
ஏன் அனுஷ்காவை இழுக்க வேண்டும்?
தேர்வாளர்கள் குறித்து குறை சொல்ல வேண்டுமென்றால் நேரிடையாக பேச வேண்டும் அதை விடுத்து பிரபலமான நடிகையாக உள்ள தன்னுடைய மனைவியின் பெயரை அதில் ஏன் நுழைக்க வேண்டும் என்று விராத் கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.
பேமிலி பாக்சில் இருந்த அனுஷ்கா
உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் போட்டியை காண தன்னுடைய இரு நண்பர்களுடன் வந்த அனுஷ்கா பேமிலி பாக்சிஸ் அமர்ந்துதான் போட்டிகளை கண்டு களித்தார். தேர்வாளர்கள் பாக்ஸ் தனியாக உள்ள நிலையில், தேர்வாளர்களுடன் இணைத்து அவரை பேசியது தவறு என்றும் கோலி தெரிவித்துள்ளார்.
எளிதாக விஷயம் கிரகிக்கப்படும்
அனுஷ்கா போன்ற பிரபலமான நடிகையின் பெயரை பயன்படுத்தினால், அந்த விஷயம் எளிதாக மற்றவர்களை சென்று சேர்ந்துவிடும் என்பதற்காக அவரது பெயரை முன்னாள் விக்கெட் கீப்பர் பயன்படுத்தியுள்ளதாகவும் விராத் கோலி குற்றம் சாட்டியுள்ளார்.
அனுஷ்கா குறித்து விராத் கோலி
எந்த இடத்திற்கு சென்றாலும் விதிமுறைகளை கடைபிடிப்பவர் அனுஷ்கா என்று தெரிவித்துள்ள விராத் கோலி, அவரது பெயரை எதற்காக மற்றவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தாங்கள் இருவருமே சிறிது காலம் மௌனம் காத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான விமர்சனம் குறித்து கோபம்
இந்த விவகாரம் குறித்து அனுஷ்கா ஷர்மாவும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தவறான விமர்சனம் என்று தெரிவித்துள்ள அவர், கிரிக்கெட் விவகாரங்களில் தன்னுடைய பெயர் ஏன் இப்படி அடிக்கடி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.