இந்திய அணி பயிற்சி
இந்திய அணியை பொறுத்தவரையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானதால், ரோகித் சர்மா தலைமையில் மற்ற பயிற்சியாளர்களை வைத்து வீரர்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன.
சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் மற்றொரு சுவாரஸ்ய வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய அணியின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் மைதானத்தில் நேரில் சந்தித்து பேசிக்கொண்ட நிகழ்வு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபருடன் கைக்குலுக்கிய கோலி, அவரை வரவேற்று, எப்படி இருக்கிறீர்கள் என்பது போன்று கேட்டுள்ளார்.
கோலி மீது எதிர்பார்ப்பு
விராட் கோலி vs பாபரின் ஆட்டம் மீது தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாபர் அட்டகாசமான ஃபார்மில் உள்ள சூழலில், விராட் கோலி தனது கம்பேக்கை கொடுப்பதற்காக முயன்று வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் இருவரும் எந்தவித போட்டியும் இன்றி சகஜமாக பேசி வருகின்றனர். இதே போல ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுடனும் விராட் கோலி நட்பு பாராட்டி மகிழ்ச்சியாக பேசினார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்கு இந்தியா இந்த முறை பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.