மும்பை: இந்திய அணி கடைசியாக ஆடிய டெஸ்ட் தொடரான ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது, விராட் கோலிக்குக் கேப்டன் பதவி அளிக்க பிசிசிஐ ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அந்தத் தொடரின் பாதியிலேயே அனைத்தும் மாறிவிட்டதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்க வேண்டும் என இரண்டாவது போட்டியின்போது பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

ஆனால், அப்போது நடந்த பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அணியின் சூழ்நிலை மாறியது. ரோகித் சர்மாவே கேப்டன் பதவியில் தொடர முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டு அவர் அந்தப் போட்டியிலிருந்து விலகினார்.
அப்போது ஜஸ்பிரித் பும்ராவுக்குக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. இரண்டாவது போட்டியின் முடிவில், பும்ராவுக்குக் கேப்டன் பதவி அளிப்பதா அல்லது விராட் கோலிக்குக் கேப்டன் பதவி அளிப்பதா என்பதே விவாதமாக மாறி இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் முடிவில் மீண்டும் ரோகித் சர்மாவையே கேப்டனாகத் தொடர வைப்பது, அவரை அணியில் வைத்திருப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் இடையே இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 1-3 எனத் தோற்றது. அதன் முடிவில், கேப்டன் பதவி அளிப்பதாகச் சொல்லப்பட்ட விராட் கோலி மீது பிசிசிஐ கடும் கோபத்தைக் காட்டியிருக்கிறது. அதை விராட் கோலி எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக விராட் கோலியை குறிவைத்து பிசிசிஐ பல்வேறு விதிகளை அமல்படுத்தியது.
'குடும்பத்தினரையும் உதவியாளர்களையும் அழைத்துச் செல்லக்கூடாது', '10 பைகளுக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது', 'தனியாகக் காரில் பயணம் செய்யக்கூடாது', 'அனைத்து வீரர்களுடனும் பேருந்தில்தான் பயணம் செய்ய வேண்டும்' என விராட் கோலி அதுவரை செய்து வந்த அத்தனை விஷயங்களும் செய்யக்கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியது. அது விராட் கோலிக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ரோகித் சர்மாவுக்கு அடுத்து யாரை டெஸ்ட் அணி கேப்டனாக நியமிப்பது என்பதில் குழப்பம் இருக்கும் நிலையில், அடுத்த கேப்டனை வளர்த்தெடுக்கும் வரையில் தான் கேப்டனாக இருக்கலாம் என கோலி நினைத்தார். மேலும் அந்தப் பேச்சுவார்த்தையை அவர் தாமாகத் தொடங்கவில்லை, பிசிசிஐ சார்பில் அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் அனைத்துமே பின்னர் மாறிவிட்டது. இதன் முடிவில் தான் விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் என்கிறார்கள். அந்த அளவுக்கு இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் அவரை அலைகழித்து இருப்பதாக கூறப்படுகிறது.