
2 மாற்றங்கள் மட்டும்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினுக்கு மீண்டும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி மிக மோசமாக தடுமாறி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. லன்ச்சுக்கு பிறகு, 10 ரன்களில் ரவீந்திர ஜடேஜா வோக்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

தப்பித்த ரஹானே
முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் ஒரு சாதாரண ஷாட் பிட்ச் பந்தில் எட்ஜ் ஆகி 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில், ஒரு சர்பிரைஸ் மூவ் என்னெவெனில், வழக்கமாக நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கும் ரஹானேவுக்கு பதில், 7வது டவுனில் களமிறங்கவிருந்த ஜடேஜாவை களமிறக்கியது இந்திய அணி. ஆனால், அதன் எந்த பலனும் இல்லை. ஜடேஜா 10 ரன்களில் வெளியேற, இப்போது கோலி - ரஹானே கூட்டணி போராடிக் கொண்டிருக்கிறது. இதில், இன்னொரு கொடுமை என்னவெனில், க்றிஸ் வோக்ஸ் ஓவரில், ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் இருந்த போது, ஒரு அபார பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால், ரஹானே சந்தேகத்துடன் ரிவ்யூ செல்ல, ஸ்டெம்புகளுக்கு மேலே பைல்ஸை உரசிக் கொண்டு செல்வது போல் இருந்தது. இதனால், அவுட் கண்டத்தில் இருந்து ரஹானே தப்பித்தார்

23,000 ரன்கள்
நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணியை சுற்றி சோக மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், விராட் கோலி ஒரு பெரும் சாதனையை படைத்திருக்கிறார். அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில், 23,000 ரன்களை எட்டிய அதிவேகமான வீரர் எனும் சாதனையை கோலி இன்றி நிகழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை கோஹ்லி வெறும் 490 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார். சச்சின் 522 இன்னிங்ஸ்களில் 23,000 ரன்களை எட்டினார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். அவர், 544 இன்னிங்ஸ்களில் 23000 சர்வதேச ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் 551 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார். இலங்கையின் குமார் சங்கக்காரா 568 இன்னிங்ஸில் 23,000 ரன்களை எட்ட, இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட் 576 இன்னிங்ஸில் இச்சாதனையை படைத்துள்ளார். இலங்கையின் மகேலா ஜெயவர்த்தனே 645 இன்னிங்ஸில் இச்சாதனையை படைத்துள்ளார்.

சச்சின் முதலிடம்
அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 24,208 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில், விராட் கோலி இப்போது 23,000 ரன்களைக் கடந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். உலக அளவில், அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்திலும், இலங்கையின் குமார் சங்கக்காரா 28,016 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











