அடிலெய்ட்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 32வது கேப்டனாக இன்று உருவெடுத்துள்ளார் விராத் கோஹ்லி. இன்று அடிலெய்ட் நகரில் தொடங்கவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு கோஹ்லிதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
ரெகுலர் கேப்டன் டோணி விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் கேப்டனாகியுள்ளார் கோஹ்லி.
டோணி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார்.

முதல் முறையாக இன்று டெஸ்ட் கேப்டனாக செயல்படவுள்ளார் கோஹ்லி. இதுகுறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மகிழ்ச்சியான தருணம். இதே அடிலெய்ட் ஓவல் மைதானத்தில்தான் எனது முதல் டெஸ்ட் சதத்தைப் போட்டேன். அதே மைதானத்தில் எனது முதல் டெஸ்ட் கேப்டன் பதவி வந்திருப்பது சந்தோஷமானது என்றார் கோஹ்லி.
26 வயதாகும் கோஹ்லிக்கு இது 30வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் போட்டிகளுக்கு இப்போதுதான் கோஹ்லி கேப்டனாக செயல்படுகிறார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அவர் ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டுள்ளார். டோணிக்கு அடுத்து கோஹ்லிதான் கேப்டன் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவேதான் டோணி கலந்து கொள்ள முடியாத போட்டிகளில் தற்காலிக கேப்டனாக கோஹ்லி செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டன் என்ற பெருமை சி.கே.நாயுடுவைச் சேரும். இவர் 1932ம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். இவர் 4 போட்டிகளில்மட்டுமே கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
2வது கேப்டன் விஜயநகரம் மகாராஜா. இவர் 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அடுத்து பட்டோடி 1946ம் ஆண்டு 3 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார்.
அதிக போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் கேப்டன் என்ற பெருமை லாலா அமர்நாத்துக்குத்தான் உண்டு. இவர் 15 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். இவரது மகன்தான் மொஹீந்தர் அமர்நாத்.
விஜய் ஹஸாரே 14 போட்டிகளுக்கும், வினூ மங்கட் 6 போட்டிகளுக்கும், குலாம் அகமது 3 போட்டிளுக்கும், பாலி உம்ரிகர் 8 போட்டிகளுக்கும், ஹேமு அதிகாரி 4 போட்டிகளுக்கும், தத்தா கெய்க்வாட் 4 போட்டிகளுக்கும், பங்கஜ் ராய் ஒரு போட்டிக்கும் கேப்டனாக இருந்துள்ளனர்.
குலாப்ராய் ராம்சந்த் 5 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார். லாலா அமர்நாத்துக்குப் பிறகு அதிக டெஸ்ட் போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர் நாரி காண்டிராக்டர். இவர் 12 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர்.
அதன் பின்னர் வந்த மன்சூர் அலிகான் பட்டோடி 40 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார். அவரைத் தொடர்ந்து வந்து சந்து போர்டே ஒரே ஒரு போட்டிக்குக் கேப்டனாக இருந்தார். அதன் பின்னர் அஜீத் வடேகர் 16 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார்.
மாடர்ன் இந்திய கேப்டன்களில் ஸ்ரீகாந்த் 5 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார். இவர்தான் பீல்டிங் உத்திகள் வகுப்பதில் புதுமையைப் புகுத்திய முதல் கேப்டன் என்று சொல்லலாம். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனானாவர் சுனில் கவாஸ்கர். இவர் 47 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார்.
பிஷன் சி்ங் பேடி 22 போட்டிகளுக்கும், குண்டப்பா விஸ்வநாத் 2 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தார்கள்.
ஹரியானா சிங்கம் கபில் தேவ் 34 போட்டிகளுக்குக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். கபில் தேவுக்குப் பிறகு திலீப் வெங்சர்க்கர் 10 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி ஒரே ஒரு போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
மீண்டும் கேப்டன் பதவிக்கு 2வது முறையாக வந்த ஸ்ரீகாந்த் இந்த முறை 4 போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்தார். அவரைத் தூக்கி விட்டு அதிரடியாக முகம்மது அஸாருதீனை நியமித்தனர்.
இந்தியாவின் முதலாவது வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் அஸார். இவர் 47 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர். பின்னர் அவரை டம்மியாக்கி விட்டு சச்சின் டெண்டுல்கரை கேப்டனாக்கினர். அவரும் 25 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார். ஆனால் தோல்விகள்தான் அதிகம் கிடைத்தது. இதனால் அவரை மாற்றி விட்டு சவுரவ் கங்குலியைக் கேப்டனாக்கினர்.
கங்குலிதான் இந்தியாவின் 2வது வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர். இவர் 49 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். அதன் பின்னர் ராகுல் டிராவிட் வந்தார். அவர் 25 போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.
அதன் பின்னர் வீரேந்திர ஷேவாக் 4 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே 14 போட்டகளுக்குக் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
கும்ப்ளேவுக்குப் பிறகு கேப்டனான டோணி, கடந்த 2008ம் ஆண்டு முதல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 58 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். டோணிதான் அதிக அளவிலான போட்டிகளுக்கு கேப்டனாக செயலாற்றிய பெருமையும்,சாதனையும் படைத்தவர் ஆவார். வெற்றி சதவீதமும் இவருக்கே அதிகம்.
இதுவரை 32 கேப்டன்களை இந்தியா கண்டிருந்தாலும் கூட விரல் விட்டு எண்ணும் அளவிலான வெற்றிகரமான கேப்டன்களையே இந்திய கிரிக்கெட் கண்டுள்ளது. தற்போது தற்காலிக கேப்டனாக களம் காணும் கோஹ்லி இந்த பஞ்சத்தை நீக்கி இந்திய டெஸ்ட் அணியை உயரத்திற்குக் கொண்டு போக இந்த தற்காலிக வாய்ப்புகள் அவருக்கு நிறைய அனுபவத்தைச் சேர்த்துத் தரட்டும் என்று வாழ்த்துவோம்...!