
ஆட்டோகிராஃப்
நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி விராட் கோலி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் விராட் கோலியிடம் அணுகி தாம் உங்களுடைய பெரிய ரசிகன் என்றும் என் பேட்டில் உங்களுடைய ஆட்டோகிராப் வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்.

பாகிஸ்தான் ரசிகர்
விராட் கோலி உடனே அந்த ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த ரசிகர் தாம், பாகிஸ்தானில் இஸ்லாம்பாத்தை சேர்ந்த நபர் என்றும் தமக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்களை அணுகி தமது பேட்டில் ஆட்டோகிராப் வாங்குவதை ஒரு பழக்கமாக வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

150 பேட்கள்
தம்மிடம் 150 பேட்டுகள் இதுபோன்று ஆட்டோகிராப் பெற்று இருப்பதாக கூறியிருக்கிறார்.இதில் இம்ரான் கான், அப்ரிடி ,யுவராஜ் சிங் , சேவாக் உள்ளிட்ட வீரர்கள் தமது பேட்டுக்கு கையொப்பமிட்டு இருக்கிறார்கள் என்றும் அந்த ரசிகர் கூறினார். உடனே அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் இந்த பேட்டை தனக்கு தருகிறீர்களா? உங்களுக்கு 4000 முதல் 5000 திர்ஹாம் தருகிறேன் என்று கூறினார்.

ஒரு கோடி ரூபாய்
அதற்கு பதில் அளித்த அந்த நபர் நீங்கள் எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த பேட் உங்களுக்கு நான் விற்க மாட்டேன் என்று பதில் அளித்தார். இந்த பேட்டை பத்திரமாக நான் பாதுகாத்து வைத்திருப்பேன் என்றும் அவர் கூறினார் தற்போது அந்த பாகிஸ்தான் ரசிகரின் பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது


Click it and Unblock the Notifications











