மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 36-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக 538 ஆட்டங்களில் விளையாடி 27,134 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி இதுவரை 80 சதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, 2024 டி20 உலக கோப்பை என மூன்று கோப்பைகளை இந்திய அணிக்காக விராட் கோலி வென்றிருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் அடிக்காமல் இருக்கின்றார்.

அது மட்டுமில்லாமல்,டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங் சரிந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி கொடுக்க வேண்டும் என யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
யுவராஜ் சிங் கோலிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் எப்போதெல்லாம் பின்னடைவை சந்திக்கிறோமோ, அதிலிருந்து மீண்டு வருவது தான் சிறந்த கம்பேக்காக பார்க்கப்படும். உன்னுடைய கம்பேக்கை பார்க்க உலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. நீ பலமுறை இதற்கு முன்பு கம்பேக் கொடுத்திருக்கிறாய். மீண்டும் ஒருமுறை செய்வாய் என உறுதியாக நம்புகின்றேன்.
கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். அளவற்ற அன்புடன் யுவராஜ் சிங் என்று அவர் கூறியுள்ளார். இதேபோன்று சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சிறந்த கிரிக்கெட் வீரருக்கும் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்னுடைய நண்பருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு மகிழ்ச்சியும் வெற்றியும் உங்களுக்கு கொடுக்கட்டும் என அவர் கூறியிருக்கிறார்.
பத்ரிநாத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பருமனான சிறுவனாக இருந்து தற்போது சிறந்த கிரிக்கெட் வீரர்களின் ஒருவராக திகழும் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடைய அணுகுமுறை ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையே மாற்றி விட்டது என்று பத்ரிநாத் கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எங்கள் காலகட்டத்தில் இருக்கும் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார்.கோலியை பார்த்து பலரும் கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என ஊக்கம் அடைந்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.