மும்பை: கால்பந்துக்கு மெஸ்ஸி எப்படியோ, அதே போல் தான் கிரிக்கெட்டுக்கு நமது விராட் கோலி தன்னுடைய அபார பேட்டிங் திறமையால் இந்திய அணியில் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் பல கோடி பேர் இவரை பின் தொடர்கிறார்கள்.
இந்த சூழலில் விராட் கோலி அண்மையில் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தாலும் அவருடைய வருமானம் மேலும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விராட் கோலிக்கு ஏ ப்ளஸ் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு அவருக்கு 7 கோடி ரூபாய் வழங்கப்படும். இதை தவிர ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாயும், ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாயும்,டி20 போட்டிக்கு 3 லட்சம் ரூபாயும் அவருக்கு கிடைக்கும்.
அதை தவிர ஆர்சிபி அணியில் விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். முதல் வருடத்தில் 12 லட்சம் ரூபாயாக இருந்த அவருடைய சம்பளம் தற்போது 21 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் இதுவரை 212 கோடி சம்பாதித்து இருப்பார் என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில் விராட் கோலி வெறும் கிரிக்கெட் மட்டும் இல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் சில நிறுவனங்களையும் விராட் கோலி தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் விராட் கோலியின் தற்போது சொத்து மதிப்பு 1050 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் அதிக பணம் வைத்திருக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமை தோலிக்கு கிடைத்திருக்கிறது. டி20 உலக கோப்பையை வென்ற பிறகு விராட் கோலியின் சொத்து மதிப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. விராட் கோலியின் பிரபலம் கொஞ்சம் கூட குறையாத நிலையில், அவருக்கான சம்பளம் தற்போது 29 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. 40 நிறுவனங்களுக்கு மேல் விராட் கோலி விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்.
மேலும் ப்ளூ ஸ்டார், எம்ஆர்எப் டயர்ஸ், பூமா போன்ற நிறுவனங்களுடன் கோலி இணைந்து செயல்படுகிறார். அதுமட்டுமில்லாமல் டிஜிட் இன்சூரன்ஸ் மற்றும் தாவரங்களால் ஆன உணவு வகைகளை தயாரிக்கும் ப்ளு ட்ரைப் என்ற பல நிறுவனங்களையும் விராட் கோலி தொடங்கி நடத்தி வருகிறார்.
விராட் கோலிக்கு தற்போது ஓய்வு நேரம் அதிகம் இருப்பதால் அவர் மேலும் அதிக விளம்பரங்களை ஒப்பந்தம் செய்யக்கூடும். இதனால் அவருடைய சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.