டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பந்தை சேதப்படுத்தியதாக பிரிட்டன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது, சுயிங்கம் மென்ற உமிழ்நீர் கொண்டு கோஹ்லி, பந்தின் தன்மையை மாற்றியதை சில வீடியோ பதிவுகள் காட்டியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதுதொடர்பாக இங்கிலாந்து அணியினர் எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை. மேலும், அந்தச் செய்தி தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக புகார் அளிப்பதற்கு ஐசிசி விதிகளின் படி கால அவகாசம் நிறைவடைந்துவிட்டது.
எதிரணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக ஓர் அணி புகாரளிக்க விரும்பினால், அந்த போட்டி நிறைவடைந்த 5 நாள்களுக்குள் புகார் செய்ய வேண்டும்.
ராஜ்கோட் டெஸ்ட் நிறைவடைந்து பல நாள்கள் ஆகிவிட்டதால், ஐசிசி விதிப்படி அச்சம்பவம் குறித்து புகார் செய்ய இயலாது. இதனால் விராட் கோஹ்லி மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
முன்னதாக ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. அதில் முதல் நாளில் பந்தின் தன்மையை மாற்றும் வகையில் சூயிங்கம் மென்ற உமிழ்நீரால் டூபிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சி விடியோ பதிவின் மூலம் தெரியவந்தது. ஆனால் இதை டூபிளெஸ்ஸிஸ் மறுத்தார்.
இது தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி கிராப்ட் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் டூபிளெஸ்ஸிஸ் பந்தைச் சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்குப் போட்டி ஊதியத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது. டூ பிளசிஸ் மீதான புகாருக்கு தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.