ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அபாரமாக சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 52 ஆவது சதத்தை அவர் பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தற்போது 83 வது சதத்தை அடித்திருக்கிறார்.
சச்சின் 100 சதத்தை முறியடிக்க இன்னும் அவருக்கு 18 சதங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் விராட் கோலி இன்று பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே பார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதம் அடித்திருந்தது சாதனையாக கருதப்பட்டது. தற்போது அதனை விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 52 சதம் அடித்து முறியடித்து இருக்கிறார்.
இதேபோன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக முறை ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். சச்சின் 58 முறை 50 ரன்கள் அடித்துள்ள நிலையில் தற்போது கோலி 59வது முறையாக அடித்துள்ளார்.
அதேபோன்று ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிக முறை ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். சச்சின் 264 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்து முதல் இடத்தில் உள்ள நிலையில் கோலி 227 முறை அடித்து இருக்கின்றார்.
இதேபோன்று ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலும் இதுவரை 6999 சதம் அடிக்கப்பட்டிருந்தது. தற்போது விராட் கோலி அடித்திருப்பது சர்வதேச கிரிக்கெட்டில் 7000 சதம் ஆகும். இதேபோன்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார்.
சச்சின், வார்னர் தலா ஐந்து முறை சதம் அடித்த நிலையில் தற்போது விராட் கோலி ஆறாவது முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்துள்ளார்.