
டெல்லி: உடலை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறோம் என்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோட்டின் சவாலை ஏற்றுக் கொண்ட விராட் கோஹ்லி, அந்த சவாலில், தன்னுடைய மனைவி அனுஷ்கா, பிரதமர் மோடி, தோனி ஆகியோரையும் கோத்து விட்டுள்ளார். இந்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள ராஜ்யவர்தன் சிங் ரதோட், முன்னாள் துப்பாக்கிச் சுடும் வீரர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்தவர். அமைச்சரான பிறகும், தொடர்ந்து உடல்நலத்தை பேணி வருகிறார்.

சமீபத்தில் 10 புஷ் அப்கள் செய்யும் தன்னுடைய வீடியோவை வெளியிட்டார் ரதோட். அதில், நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியாவும் ஃபிட்டாக இருக்கும் என்ற தலைப்பில் புதிய சவாலை விடுத்தார்.
கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, நடிகர் ஹிருத்திக் ரோஷன், பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஆகியோருக்கு இந்த சவாலை விடுத்தார்.
அதையேற்று புஷ்அப் செய்யும் வீடியோவை வெளியிட்டு, தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி, கேப்டன் கூல் தோனி ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார் கோஹ்லி. இந்த சவாலை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதில் டுவிட் அனுப்பியுள்ளார்