போர்ட் ஆப் ஸ்பெயின்: ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர்பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீராங்கனை பிவி சிந்துவுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் வீடியோ மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் நோசோமி ஓகுஹராவும் மோதினர். இதில் அபாரமாக விளையாடிய பிவி சிந்து, ஜப்பான் வீராங்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிட்டது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பிவி சிந்து, ஸ்பெயின் வீராங்கனை மரினை எதிர்கொள்கிறார். இதனையொட்டி, தற்போது பாராட்டு மழையில் நனைகிறார் சிந்து. இதனிடையே சிந்துவுக்கு, விராத் கோஹ்லி வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளதாவது: இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்ததற்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் இந்தியாவிற்கு மிகப் பெரிய பெருமை கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்கு பெற்றுத் தருவீர்கள் என நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் என்ன நடந்தாலும் நீங்கள் தான் சாம்பியன். குட் லக்... ஜெய் ஹிந்த்.. என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில், பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு தற்போது 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில், டிரினிடாட்டில் இருந்து பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மற்றும் விராத் கோஹ்லி ஆகியோர் பிவி சிந்துவுக்கு வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.