குறைந்த இடைவெளி
நியூசிலாந்து அணிக்கு எதிராக, ஜனவரி 24 அன்று இந்தியா முதல் டி20 போட்டியில் ஆட உள்ளது. ஜனவரி 19 அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் பெங்களூருவில் இந்தியா ஆடி இருந்தது. அந்த தொடர் முடிந்த ஐந்தாம் நாள் இந்தியா நியூசிலாந்து மண்ணில் ஆட உள்ளது.
நேர வித்தியாசம்
இந்திய நேரத்தில் இருந்து சுமார் 7 மணி நேரம் வித்தியாசம் கொண்ட நியூசிலாந்து நாட்டில் இத்தனை குறைந்த இடைவெளியில் இந்திய அணி ஆடுவது மிகவும் கடினம் தான். அதைப் பற்றி பேசிய கேப்டன் கோலி எதிர்காலத்தில் இந்த விஷயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
உடனடி பயணம்
அதிலும், இந்திய அணி ஆஸ்திரேலிய தொடர் முடிந்த உடன், மறுநாளே பெங்களூருவில் இருந்து அப்படியே நியூசிலாந்து நாட்டுக்கு பயணத்தை துவங்கியது. இதுவரை இப்படி ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி கிளம்பியதாக நினைவில் இல்லை.
பிசிசிஐ அதிகாரிகள் கேள்வி
இந்த நிலையில், கோலி இது குறித்து பிசிசிஐ செயலாளர் அல்லது இந்த பயண திட்டம் முடிவு செய்யப்பட்ட போது பிசிசிஐ-யை நிர்வகித்து வந்த நிர்வாக கமிட்டி ஆகியோரிடம் பேசி இருக்கலாமே? என சில பிசிசிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த திட்டம் ஏன்?
மேலும், வீரர்கள் ஆஸ்திரேலிய தொடர் முடிந்து பிரிந்து சென்று, பின் மீண்டும் சேர்ந்து நியூசிலாந்து பயணத்தை துவக்குவது அதிக நேர விரயத்தையும், பயண அலுப்பையும் உண்டாக்கும் என்பதாலேயே நேரடியாக பெங்களூருவில் இருந்து கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினர்.
புகைச்சல்
தற்போது கங்குலி பிசிசிஐ தலைவராக இருக்கும் நிலையில், கோலி நேரடியாக அவருடனே பேசும் நிலையில் தான் இருக்கிறார். கங்குலியும் இந்திய அணிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், கோலி ஊடகத்தில் பிசிசிஐயின் திட்டம் பற்றி விமர்சித்து பேசியது புகைச்சலை உண்டாக்கி உள்ளது.