மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் ஆகிய இருவருடன் டேட்டிங் செய்தீர்களா என்ற கேள்விக்கு நடிகை தமன்னா முதல்முறையாக பதில் அளித்துள்ளார். நடிகை தமன்னா அளித்துள்ள பதில் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் இரண்டையும் பிரிக்கவே முடியாது. இந்திய அணியின் வீரர்கள் ஏராளமானோர் பாலிவுட் நடிகைகளை திருமணம் முடித்துள்ளனர். 1980 முதலே இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன. விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகைகள் இணைந்து நடிக்கும் போது அவர்களுக்கு இடையில் நட்பு உருவாகுவது தொடர் கதையாகி வருகிறது.

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கூட விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டு தான் காதலிக்க தொடங்கினார்கள். அதேபோல் இந்திய ஜாம்பவான் தோனியுடன் நடிகை லக்ஷ்மி ராய், தீபிகா படுகோனே ஆகியோர் டேட்டிங் சென்றிருக்கின்றனர். இதனை லக்ஷ்மி ராய் வெளிப்படையாக பல்வேறு நேர்காணல்களில் கூறி இருக்கிறார்.
அந்த வகையில் நடிகை தமன்னா தொடர்ச்சியாக விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தார். சினிமா வட்டாரத்தில் தமன்னா எந்த நடிகருடனும் பெரியளவில் இணைத்து பேசப்பட்டதில்லை. ஆனால் விராட் கோலி திருமணம் முடிவதற்கு முன்பு வரை தமன்னாவுடன் இணைத்து பேசப்பட்டு வந்தார்.
இதுதொடர்பாக தமன்னா ஒருமுறை கூட விளக்கம் அளித்ததே இல்லை. தற்போது முதல்முறையாக மனம் திறந்துள்ளார். அதன்படி தமன்னா பேசுகையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் உடன் ஒரு நகைக் கடையை திறந்து வைத்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதனால் இருவரும் இணைந்து நகைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். இதனால் அவருடன் இணைத்து பேச தொடங்கிவிட்டார்கள்.
அவருக்கு ஏற்கனவே 2 அல்லது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் அப்துல் ரசாக் சாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதில் துளியளவும் உண்மை இல்லை. அதேபோல் விராட் கோலியை ஒரேயொரு முறை விளம்பர படப்பிடிப்பில் மட்டும் சந்தித்தேன். ஒருநாள் மட்டுமே விராட் கோலியுடன் படப்பிடிப்பு கலந்து கொண்டேன். அதன்பின் விராட் கோலியை சந்திக்கவே இல்லை.
சில நேரங்களில் இப்படியான செய்தி வெளியாகும் போது சோகமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விஷயங்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை குறைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.