மும்பை: இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்ட பின் அவர் ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்பு எந்த அணிக்கும் அவர் கேப்டனாக இருக்கவில்லை.
இந்த நிலையில், அவர் மீண்டும் கேப்டனாகும் வாய்ப்பு ஒன்று கைகூடி வந்துள்ளது. இந்திய அளவிலான டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது. இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி என நான்கு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.

இதில் இந்திய அணியின் டெஸ்ட் வீரர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இதில் பங்கேற்க உள்ளனர். துலீப் ட்ராபியில் பங்கேற்க உள்ள நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருப்பார் என கூறப்படுகிறது.
அதே போல, விராட் கோலி இதில் ஒரு அணியின் கேப்டனாக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுப்மன் கில் மற்றும் கே எல் ராகுல் மற்ற இரண்டு அணிகளுக்கு கேப்டன்களாக இருப்பார்கள் எனவும் யூகங்கள் வெளியாகி உள்ளன.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் எந்த அணிக்கும் கேப்டனாக இருக்க விரும்பவில்லை. இந்த நிலையில் அவர் துலீப் டிராபி தொடரில் கேப்டனாக இருக்க ஒப்புக் கொள்வாரா? அல்லது வேறு ஒரு வீரரை கேப்டன் ஆக்கி அவரது தலைமையில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
துலீப் டிராபி தொடரில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாட வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 5 அன்று இந்த தொடர் துவங்க உள்ளது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் செப்டம்பர் 12 அன்று நடைபெறும். விராட் கோலி முதல் போட்டியில் இருந்து விலகி விட்டு, இரண்டாவது போட்டியில் மட்டும் தான் பங்கேற்பார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் சிலர் கூறுகின்றனர்.