மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பத்தாயிரம் ரன்களை தொட வாய்ப்பு இருந்தும், திடீரென்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான விராட் கோலி இன்னும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடல் தகுதியில் விராட் கோலியை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது என்ற சூழலில் அவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்றால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் விராட் கோலி எப்போதுமே ரன்கள் அடிக்கவேண்டும் என்ற பசியில் இருப்பார். இதனால் தான் மற்ற வீரர்களிடமிருந்து அவர் மாறுபட்டு இருக்கிறார். தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கிரிக்கெட்டுக்காக பின்பற்றுபவர் தான் விராட் கோலி.
கடுமையாக உழைப்பார். தொடர்ந்து ரன்களை அடித்து வருகிறார். 36 வயதை தாண்டினாலும் உடல் தகுதியில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. 90 சதவீதம் வீரர்கள் உடல் தகுதி என்று வந்துவிட்டால் விராட் கோலிக்கு பின்னால் தான் இருப்பார்கள். இப்படி இருக்கும் போது விராட் கோலி மிகவும் முன்னதாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்று தான் நான் நினைக்கின்றேன்.
அவரால் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆவது கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி இருக்க முடியும். அப்படி இருக்கும் போது அவர் ஏன் சென்றால் என தெரியவில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார். விராட் கோலி நல்ல உடல் தகுதியில் இருந்தாலும் அவருக்கு ஆப்சைடுக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிப்பதில் பிரச்சனை இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலியை அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இந்த வீக்னீஸை வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் கதையை முடித்தனர். அந்த வீக்னஸில் இருந்து வெளியே வர முடியாமல் விராட் கோலி தடுமாறினார். இதனாலே இந்த முடிவை அவர் எடுத்தார் என்று கூறப்படுகிறது.