மும்பை: இந்திய அணி வீரர்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ சமீபத்தில் ஒரு விதியை அமல்படுத்தியிருந்தது. அதை விராட் கோலி வெளிப்படையாகவே எதிர்த்து இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி அவர் தன் மனக் குமுறலை கொட்டி இருக்கிறார்.
இது போன்ற முடிவுகள் எடுப்பவர்களை நாம் தள்ளி வைக்க வேண்டும் எனவும், ஒரு தோல்விக்கு பிறகு குடும்பத்தினருடன் நாம் இருக்கும் போது அது எந்த அளவுக்கு நம்மை அமைதிப்படுத்துகிறது என்பதை விவரிப்பது மிகவும் கடினம் எனவும் கூறி இருக்கிறார் விராட் கோலி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்தி இருந்தது. அதன்படி 45 நாட்கள் அல்லது அதற்கும் நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது மட்டுமே குடும்பத்தினர் அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதற்கு குறைவான நாட்கள் உடைய வெளிநாட்டு தொடர்களுக்கு குடும்பத்தினர் ஒரு வாரம் மட்டுமே உடன் இருக்க முடியும். மேலும், குடும்பத்தினரின் செலவுகளுக்கான தொகையை அந்த வீரரே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வீரர்கள் தங்கள் அணியினருடன் ஒரே பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
அது பற்றி விராட் கோலி பேசுகையில், "நான் இந்த விதிகள் குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லாத மனிதர்கள் விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் முடிவுகளை எடுப்பதில் முன்னிலையில் இருக்கிறார்கள். நாம் அது போன்ற நபர்களை தள்ளி வைக்க வேண்டும்."
"வெளியில் நாம் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை, தோல்வியை அனுபவித்து விட்டு மீண்டும் நமது குடும்பத்தினருடன் வந்து இருக்கும்போது அது எந்த அளவுக்கு நம்மை அமைதிப்படுத்துகிறது என்பதை சொல்வது மிகவும் கடினம். அது எந்த அளவுக்கான மதிப்பை உருவாக்குகிறது என்பதை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்" என்றார் விராட் கோலி.