டெல்லி: சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். அவரது சொந்த மாநிலமான டெல்லி அணிக்காக அவர் விளையாட இருக்கிறார். முதல் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு கழுத்தில் வலி இருந்ததால் அவர் அந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக அவர் தயாராகி வருகிறார். அதற்காக முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் விராட் கோலி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சஞ்சய் பங்கர் பேக் ஃபுட்டில் ஆடுவதற்கு விராட் கோலிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

சமீபகாலமாக விராட் கோலி ஆஃப் சைடு வரும் பந்துகளை எதிர்கொள்ளும் போது எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வருகிறார். அந்த தவறை சரி செய்வதற்கான பயிற்சிகளை சஞ்சய் பங்கர் அளித்து வருகிறார். இதனிடையே முன்னாள் இந்திய அணி கேப்டனான விராட் கோலி டெல்லி அணியில் ஆடுவதை அடுத்து டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பு அவருக்கு கேப்டன் பதவியை வழங்க முன் வந்தது.
ஆனால், விராட் கோலி அதை மறுத்துவிட்டார். முன்னதாக ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் பங்கேற்று ஆடினார். சௌராஷ்டிரா அணிக்கு எதிரான அந்தப் போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் பதவியை அளிக்க அம்மாநில கிரிக்கெட் அமைப்பு முன் வந்தது.
ஆனால், ரிஷப் பண்ட் அதை மறுத்துவிட்டார். தனக்கு டெல்லி அணியின் வீரர்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து முழுமையாக தெரியாது என்பதால் தான் தற்போதைய கேப்டன் ஆயுஷ் பதோனியின் கேப்டன்சியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும், தன்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் கூறி இருந்தார்.
கிட்டத்தட்ட அதே விஷயத்தை தான் விராட் கோலியும் கூறி இருப்பதாக டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களை எடுத்து ஏமாற்றம் அளித்தார். தற்போது ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் அதிக ரன் குவிப்பார்களா? என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.