
குவாரன்டைன் தீபாவளி
2020 ஐபிஎல் தொடரை முடித்து விட்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது, அங்கே கிரிக்கெட் தொடரில் ஆடும் முன் குவாரன்டைனில் உள்ளனர். இந்திய வீரர்கள் அங்கேயே தீபாவளியை ஹோட்டல் அறையில் இருந்தவாறு கொண்டாடி வருகின்றனர்.

விராட் கோலி வாழ்த்து
இந்த நிலையில் தீபாவளி வாழ்த்து கூறினார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி. வெறும் 18 வினாடி கொண்ட அந்த பதிவில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் விளக்கு மட்டும் ஏற்றி சுற்றுப் புறச் சூழலை பாதுகாத்து தீபாவளி கொண்டாடுவோம் என கோலி கூறி இருந்தார்.

அதெப்படி சொல்லலாம்?
இதைக் கேட்ட பலரும் கடும் கோபம் கொண்டனர். எங்களுக்கு தீபாவளி எப்படி கொண்டாட வேண்டும் என சொல்லிக் கொடுக்க இவர் யார்? பட்டாசு வெடிக்கக் கூடாது என எப்படி சொல்லலாம்? இவர் மட்டும் பட்டாசு வெடிக்காமல் இருந்தாரா? இல்லை சுற்றுப் புறச் சூழலை கெடுக்காமல் இருந்தாரா? என பதிலடி பதிவுகளால் திணற வைத்தனர்.
ஐபிஎல் வெடி
ஐபிஎல் தொடரில் பட்டாசு வெடிக்கப்படும். குறிப்பாக இறுதிப் போட்டியின் முடிவில் பெரிய அளவில் பட்டாசு வெடிக்கப்படும். அதைக் குறிப்பிட்டு, ஐபிஎல் தொடரில் இவர் ஆடும் போது பட்டாசு வெடித்தார்கள். அப்போது சும்மா இருந்து விட்டு எங்களை மட்டும் ஏன் சொல்கிறார்? என கேட்டுள்ளனர்.
குடிநீரில் காரை கழுவியது..
கடந்த ஆண்டு விராட் கோலியின் வீட்டுப் பணியாளர் வெயில் காலத்தில் குடிநீரில் கோலியின் கார்களை கழுவியதாக சர்ச்சை எழுந்தது, முனிசிபாலிட்டி அவருக்கு அப்போது 500 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் செய்தி வெளியானது. அதை சுட்டிக் காட்டி இவர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறாரா? என கேட்டுள்ளனர் சிலர்.
கிரிக்கெட்டால் சீர்கேடு
கிரிக்கெட் மைதானம் உருவாக்க மரத்தை வெட்டத் தேவையில்லை. மைதானத்தில் தண்ணீர் வீணாக்கப்படாது. ஐபிஎல்-இல் பட்டாசு வெடிக்கவே மாட்டார்கள். கார்கள், அணியின் பேருந்துகள் எரிபொருள் பயன்படுத்தாது. அவரது திருமணம், விளம்பரங்களில் பட்டாசு வெடிக்க மாட்டார்கள். ஆனால், சுற்றுப்புறச் சூழல் தீபாவளி அன்று வெடிக்கப்படும் பட்டாசு காரணமாக மட்டுமே மாசடைகிறது என ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
பிளேன் விடும் புகை
நான் தனி விமானத்தில் செல்வேன். எரிபொருளை குடித்து புகை விடும் 100 கார் வைத்திருப்பேன். என் வீட்டில் ஆண்டு முழுவதும் ஏசி ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால், நீங்கள் உங்கள் பண்டிகையை ஒழுங்காக கொண்டாடக் கூடாது என கோலியை கேலி செய்துள்ளார் மற்றொருவர்.
பிசிசிஐயிடம் சொல்ல முடியுமா?
இவர் இப்போது தான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முழுவதுமாக பட்டாசு வெடித்து விட்டு வந்துள்ளார். நமக்கு இவர் எப்படி தீபாவளி கொண்டாடுவது என சொல்லித் தருகிறார். இதை இவர் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்திடம் கூற முடியுமா? என ஒருவர் கேட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ஞாபகம் இருக்கா?
2016 ஜனவரி 1 அன்று புதிய வருடப் பிறப்பை கொண்டாடி கோலி அப்போது ஒரு புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அதன் பின்னணியில் பட்டாசு வெடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதைக் கொண்டாடியபடியே அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அதைக் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளனர். சிலர் நாம் பட்டாசு வெடித்தால் புகை வரும், இவர் வெடித்தால் மட்டும் ஆக்சிஜன் வருமா? என கோபத்தை காட்டி உள்ளனர்.
ரோஹித் சர்மா
விராட் கோலி சர்ச்சை வீடியோவை, ரோஹித் சர்மாவின் தீபாவளி வாழ்த்துடன் சிலர் ஒப்பிட்டுள்ளனர். ரோஹித் சர்மா உங்களுக்கு பிடித்தவர்களுடன் வெளிச்சத்துடன், பாதுகாப்பாக, நல்ல சத்தமாக இருங்கள் என தீபாவளி வாழ்த்து கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications