பயிற்சியாளர் கும்ப்ளேவை நீக்கியே தீர வேண்டும்.. கொடி பிடிக்கும் கோஹ்லி.. கோபத்தில் பிசிசிஐ
லண்டன்: அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வதில் தனக்கு விருப்பமில்லை என்று அணி கேப்டன் கோஹ்லி, சச்சின் உள்ளிட்டோர் அடங்கிய கிரிக்கெட் வழிகாட்டும் குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே திறம்பட செயல்பட்டு வருகிறார். ஆனால், அவர் அப்பதவியில் மீண்டும் தொடர கேப்டன் கோஹ்லிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. கும்ப்ளே தென் இந்தியர் என்பது அவருக்கு எதிரான செயல்பாடுகளுக்கு காரணம் என்ற பேச்சும் உள்ளது.
இந்த நிலையில் கும்ப்ளேயின் பதவிக்காலம் நேற்றோடு நிறைவடைவதாக இருந்த நிலையில்அடுத்த மாதம் 10ம் தேதிவரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆறுபேர்
இதன்பிறகு கோச் பதவிக்கு விண்ணப்பித்துள்ள, வீரேந்திரசேவாக் உட்பட 6 பேரில் ஒருவரை நேர்காணல் நடத்தி சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் வழிகாட்டும் குழு தேர்ந்தெடுக்கும். இந்த அறுவரில் கும்ப்ளேயும் ஒருவர். அவரும் விண்ணப்பித்துள்ளார்.

கோஹ்லி திட்டவட்டம்
இந்த நிலையில் மீண்டும் கும்ப்ளேயை கோச்சாக நியமிக்க கூடாது என வழிகாட்டு கமிட்டியிடம் கோஹ்லி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆலோசனை
கோஹ்லியின் முடிவை தொடர்ந்து சச்சின் உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டு குழுவினர் இன்று கும்ப்ளேவை சந்தித்து பேச உள்ளனர். அப்போது கோஹ்லி கருத்து குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இது சரியில்லை
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், கோஹ்லி என்னதான் திறமையான வீரராக இருந்தாலும், பயிற்சியாளர் விஷயத்திலும் தலையிடுவது தவறான முன் உதாரணமாகிவிடும். கும்ப்ளேயை பதவி நீட்டிப்பு செய்யாமல் இருக்க வலுவான காரணம் வேண்டும். அவர் பயிற்சியாளரான பிறகு இந்தியா சிறப்பாகத்தான் ஆடி வருகிறது என ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளனர்.

புதிய பயிற்சியாளர்
புதிதாக நியமிக்கப்படும் கோச்சும் கோஹ்லிக்கு புடிக்கவில்லை என்றால் அவரையும் மாற்ற முடியுமா என்பது பிசிசிஐ முன்னால் உள்ள கேள்வி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலில், இந்தியா மோசமாக தோற்றதையடுத்து கோஹ்லி-கும்ப்ளே மோதல்தான் அதற்கு காரணம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications