த்ரில் வெற்றி
இந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாற, விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி தான் காப்பாற்றினர். ஒருபுறம் பாகிஸ்தான் கட்டுக்கோப்பாக பந்துவீச, இவர்கள் நிதானமாக ரன் சேர்த்து வந்தனர். இதனால் கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 48 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது.
சிறப்பான பார்ட்னர்ஷிப்
அப்போது கியரை மாற்றிய கோலி - பாண்ட்யா ஜோடி 18வது ஓவரில் 17 ரன்களும், 19வது ஓவரில் 15 ரன்களும், 20வது ஓவரில் 16 ரன்களையும் குவித்து த்ரில் வெற்றியை தேடிக் கொடுத்தனர். குறிப்பாக பாகிஸ்தானின் முன்னணி பவுலர்களான ஹாரிஸ் ராஃப் மற்றும் சாஹீன் அஃப்ரிடி ஓவர்களில் கோலி சிக்ஸர்களை பறக்கவிட்டது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
கோலியின் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி விளக்கமளித்துள்ளார். அதில், ஆட்டத்தின் 18வது ஓவரில் சாஹீன் பெவிலியன் எண்டில் இருந்து வீசினார். அப்போதே அவரை அடித்து ஆட வேண்டும் என முடிவெடுத்தோம். அதன்படி அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 17 ரன்களை குவித்தோம். அதன்பின்னர் எங்களின் கணக்கு சுலபமானது.
பயம்காட்ட விரும்பினேன்
முகமது நவாஸ் எப்படியும் கடைசி ஓவர் வீசுவார் என்பது தெரியும். எனவே பாகிஸ்தானின் முன்னணி பவுலரான ஹாரிஸ் ராஃப்பை அடித்து நொறுக்கினால் அவர்கள் பயப்படுவார்கள் என நினைத்தேன். அதன்படி அந்த 2 சிக்ஸர்களை விளாசினேன். இதனால் 8 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்பதில் இருந்து 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என மாறியது. அதன்பின் நடந்தது அனைவருக்கும் தெரியும் என கோலி கூறினார்.