சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூடுதலாக 45 நிமிடங்கள் வரை வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அகமதாபாத் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அக்.8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா களமிறங்கவுள்ளது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் நேற்றே சென்னை வந்துவிட்டனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மட்டும் கேப்டன்ஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்க அகமதாபாத் சென்றார். அவரும் இந்திய அணியுடன் இன்று இணைந்துள்ளார். இதனிடையே இந்திய அணி வீரர்கள் நேற்று முதலே சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
முதல் நாளிலேயே இந்திய அணி வீரர்கள் பலரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக விராட் கோலி திட்டமிட்டதை விடவும் கூடுதலாக 45 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலைப்பயிற்சியில் கூடுதல் நேரம் செலவிட்டதற்கு பயிற்சி ஆட்டங்கள் நடக்காததே காரணம் என்று பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் இந்திய அணிக்கு திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் சென்னையில் தரையிறங்கிய முதல் நாளிலேயே இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் என்னதான் விராட் கோலி கிங் என்றாலும், உலகக்கோப்பை தொடர்களில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. இவ்வளவு ஏன், சேஸ் மாஸ்டரான விராட் கோலி இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் சேஸிங்கின் போது ஒரு அரைசதம் கூட விளாசியதில்லை. அந்த மோசமான சாதனைக்கு விராட் கோலி விரைவில் முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.