சிஏசி உறுப்பினர்கள் தேர்வு
முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
புதிய தலைமை தேர்வாளர் தேர்வு
மும்பையில் நேற்று முன்தினம் கூடிய மதன் லால் உள்ளிட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 44 பேர் கொண்ட விண்ணப்பங்களில் 5 பேரை நேர்காணலுக்கு தேர்வு செய்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற நேர்காணலில் தேசிய தலைமை தேர்வாளராக சுனில் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்வுக்குழு உறுப்பினராக ஹர்விந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதன் லால் திட்டவட்டம்
இதனிடையே கேப்டன் விராட் கோலியை மனதில் வைத்தே புதிய தலைமை தேர்வாளர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் மதன் லால் தெரிவித்துள்ளார். விராட் கோலி போன்ற ஆளுமை மிக்க கேப்டனுடன் கைகோர்த்து நடைபோடும் வகையில் இந்த புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
கைகோர்க்கும் தேர்வாளர்கள்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் சிறப்பான ஆட்டக்காரர் என்றும் அவர் இன்றி இந்திய அணி சிறப்பாக வழிநடத்தப்படாது என்றும் கூறியுள்ள மதன்லால், இதை கருத்தில் கொண்டே, புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றதாகவும், நடந்து முடிந்துள்ள சம்பவங்களுக்கு இந்த தேர்வு விடையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து சுனில் ஜோஷி
இதனிடையே சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 8 மாதங்களாக விளையாடாமல் உள்ள முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால் அவரை இந்திய அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.