
சர்ச்சையின் தொடக்கம்
விராட் கோலியின் சறுக்கலே நடப்பாண்டின் 2வது பாதியில் தான் தொடங்கியது. ஜூன் 18ஆம் தேதி ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதியது.இதில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 44 ரன்கள், 2வது இன்னிங்சில் 13 ரன்கள் மட்டுமே எடுக்க இந்தியா தோல்வியை தழுவியது. அப்போது,சீனியர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோற்றுவிட்டதாக கூற, இந்திய அணியில் சச்சரவு கிளம்பியது. அப்போது அணியின் மூத்த வீரர்கள் சிலர் விராட் கோலிக்கு எதிராக பி.சி.சி.ஐ.யிடம் புகார் கூறினர்.

தவறான முடிவுகள்
இதன் பின்னர், இங்கிலாந்தில் தங்கி இருந்த இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இதில் கடைசி போட்டி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட இந்தியா 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இந்த தொடரில் அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு தராமல், விராட் கோலி வெளியே அமர வைத்தார். மேலும் பார்மில் இல்லாத ரஹானேவை அணியில் வாய்ப்பு அளித்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் கோலி மீது அதிருப்தி எழுந்தது

ராஜினாமா
இந்த நிலையில் தான் டி20 போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், டி20 உலகக் கோப்பை தான் கேப்டனாக தமக்கு கடைசி தொடர் என்று அறிவித்த விராட் கோலி, நடப்பு சீசனுடன் ஐ.பி.எல். கேப்டன் பதவியையும் துறந்தார். ஐ.பி.எல். முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி, இரண்டாம் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்தது. எனினும் பிளே ஆப் சுற்றுடன் பெங்களுரு அணி நடையை கட்டியது.

வரலாற்று தோல்வி
இதன் பின்னர் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா தோல்வியை தழுவியது. இது விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் கரும்புள்ளியாக அமைந்தது. தொடர்ந்து விராட் கோலியின் தவறான முடிவுகளால் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது.

கேப்டன் பதவி நீக்கம்
இந்த தோல்வியால் நியூசிலாந்துடன் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி ஓய்வு எடுத்து கொண்டு ஒரு டெஸ்டில் தான் விளையாடினார். அதில் இந்தியா வென்றது. அதன் பிறகு தான், ஒருநள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியது. இதனால் கோலியின் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்க மாட்டேன் என்று கோலி கூறியதாக தகவல் வெளிவர, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கங்குலியுடன் மோதல்
ரசிகர்களை சமாதானப்படுத்த, கோலியை டி20 கேப்டன் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை என்றும் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி கூறினார். ஆனால் தம்மிடம் யாரும் அப்படி கூறவில்லை என்று விராட் கோலி மறுப்பு தெரிவிக்க, மீண்டும் பிரச்சினை உருவானது.இதனால் விராட் கோலியின் டெஸ்ட் பதவிக்கும் ஆபத்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டில் கோலி
2021ஆம் ஆண்டிலும் விராட் கோலி சதத் அடிக்கவில்லை. நடப்பாண்டில் 10 டெஸ்டில் விளையாடியுள்ள கோலி வெறும் 483 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் 4 அரைசதம் அடங்கும். 3 ஒருநாள் போட்டியில் களமிறங்கி 129 ரன்களும்,10 டி20 போட்டியில் விளையாடி 4 அரைசதங்களுடன் 299 ரன்களும் மட்டுமே அடித்துள்ளார். வரும் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடிப்பாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வரும் புத்தாண்டிலாவது விராட் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











