அம்பயரிடம் அடாவடி.. கோஹ்லிக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி
செஞ்சுரியன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவே செஞ்சுரியன் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 25வது ஓவரை வீசியபோது, அந்த சம்பவம் நடந்தது.

கள நடுவர் மைக்கேல் கோஃப்பிடம், பந்து சேதமடைந்துள்ளதாக கூறி அதை மாற்றுமாறு கோஹ்லி வலியுறுத்தினார். இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே கோபத்தில் பந்தை மைதானத்தில் கீழே நோக்கி எறிந்தார் கோஹ்லி.
இதுகுறித்து கள நடுவர்களான மைக்கேல் கோஃப், பால் ரீஃபல், மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் கெட்டல்பரோ மற்றும் நாலாவது நடுவர் அல்லாவுதீன் பாலேகர் ஆகியோர் அளித்த புகாரின்பேரில் ஐசிசி விசாரணை நடத்தியது.
இதன்படி, ஐசிசி சட்டதிட்டத்தின், 2.1.1 என்ற பிரிவின்படி, கோஹ்லி நடுவருக்கு அவமரியாதை செய்தது நிரூபணமானது. இதையடுத்து, அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பாயிண்ட் டீமெரிட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications