டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ரூ. 90 கோடி செலவில் ஜிம்களை துவங்க உள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ரூ.90 கோடி செலவில் சிஸெல் என்ற பெயரில் நாடு முழுவதும் ஜிம்கள் அதாவது உடற்பயிற்சி கூடங்களை திறக்க உள்ளார். அவர் சிஸெல் பிட்னஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஜிம்களை துவங்குகிறார்.
இது குறித்து சிஸெல் பிட்னஸ் தலைவர் சத்யா சின்ஹா கூறுகையில்,
நாங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 ஜிம்களை திறக்க உள்ளோம். இடங்களுக்கு ஏற்ப ஜிம்மின் அளவு இருக்கும் என்றார்.

ஜிம்கள் துவங்குவது வெறும் ஆரம்பம் தான். பிட்னஸ் தொடர்பான உடைகள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளது என்று சிஸெலின் மார்க்கெட்டிங் பார்டனரான பிரான்சைஸ் இந்தியாவின் தலைவர் கௌரவ் மார்யா தெரிவித்துள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் எப்.சி.கோவா அணியின் இணை உரிமையாளர் கோஹ்லி. மேலும் இளைஞர்களுக்கான உடைகளான ரோக்ன் என்ற பிராண்டின் உரிமையாளர் கோஹ்லி.
முன்னதாக கேப்டன் டோணி ஸ்போர்ட்ஸ்பிட் என்ற பெயரில் ஜிம்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.