மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புகழ் வந்தவுடன் மாறிவிட்டதாகவும், இதனால் தாம் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கூறி இருந்தார். விராட் கோலி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
பலரும் அமித் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விராட் கோலி எவ்வளவு உச்சிக்கு சென்றாலும் பழையதை மறக்கும் வீரர் கிடையாது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா,விராட் கோலி உடன் உள்ள நட்பு குறித்து தற்போது பேசியிருக்கிறார்.

அதில் நான் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியை எவ்வாறு பார்த்தாலும் அதே போல் தான் என்னுடன் இன்றும் கோலி பழகுகிறார். நாங்கள் இருவரும் நல்ல முறையில் பழகி வருகிறோம். எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. விராட் கோலி என்னை ஒருபோதும் தவறாக நடத்தியது கிடையாது.
கடந்த ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டியில் கூட விராட் கோலி பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தார். அப்போது நான் கிரிக்கெட் வர்ணனைக்காக அங்கு நின்றேன். என்னை பார்த்தவுடன் விராட் கோலி இரவு ஏதேனும் உணவை வாங்கி சாப்பிடுவோமா என்று கேட்டார். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
ஏனென்றால் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விராட் கோலியை எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் இருவரும் மாலை நேரத்தில் ஏதேனும் உணவை வாங்கி சாப்பிடுவோம். அதை அவர் மனதில் வைத்துக் கொண்டு இன்னும் பேசினார் என்று கூறியிருந்தார். மேலும் தாம் முதல் முறையாக பந்து வீசியபோது கெவின் பீட்டர்சன் தம்மை பாராட்டியதாக கூறியுள்ள பியூஸ் சாவ்லா, வார்னே போல் தாம் பந்து வீசியதாக பீட்டர்சன் கூறியதாக தெரிவித்தார்.