
வீடுகளில் முடங்கிய வீரர்கள்
கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு ஏறக்குறைய 8 மாதங்கள் விளையாட்டு வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில் அதிகமான நேரத்தை சமூக வலைதளங்களில்தான் செலவிட்டனர்.

கோலி, பாண்டியா, சச்சின் பதிவுகள்
குறிப்பாக டிவிட்டர் தளத்தில் கேப்டன் விராட் கோலி, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரை அதிகமாக பார்க்க முடிந்தது. அவர்களின் பிட்னஸ், சமையல் வீடியோக்கள் மற்றும் சொந்த வாழ்வின் நிகழ்வுகளை அவர்கள் அதிகமாக பதிவிட்டு தங்களை பரபரப்பாக வைத்துக் கொண்டனர்.

விராட் கோலி முதலிடம்
இந்நிலையில் 2020ல் அதிகமாக குறிப்பிடப்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் குறித்த பட்டியலை டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த லாக்-டவுன் நேரத்தில் மட்டுமின்றி பொதுவாகவே டிவிட்டரில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

3வது இடத்தில் தோனி
விராட் கோலியை தொடர்ந்து டிவிட்டரில் அதிகமாக குறிப்பிடப்பட்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை ரோகித் சர்மாவும் மூன்றாவது இடத்தை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும் பிடித்துள்ளனர். ரோகித்தும் இந்த லாக்-டவுன் நேரத்தில் அதிகமான நேரத்தை டிவிட்டரில் செலவிட்ட நிலையில், அதிகமாக செயல்படாததாலேயே ரசிகர்களால் அதிகமாக தேடப்பட்டுள்ளார் தோனி. மேலும் இவரது ஓய்வு அறிவிப்பும் இவரை அதிகமாக தேட செய்தது.

கீதா போகத் முதலிடம்
இந்நிலையில், அதிகமாக குறிப்பிடப்பட்ட வீராங்கனைகள் பட்டியலில் மல்யுத்த வீராங்கனை கீதா போகத் முதலிடத்தை பிடித்துள்ளார். இதேபோல ஐபிஎல் 2020, விசில்போடு மற்றும் டீம்இந்தியா உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளும் இந்த ஆண்டில் அதகமாக பேசப்பட்டவை என்ற சிறப்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications