லக்னோ : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி ஒரு மோசமான ரெக்கார்டை படைத்திருக்கிறார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் தோய்வாக இருப்பதால் பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை.

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். ஆனால் ரோகித் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். ரசிகர்கள் கில் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் அவர் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் விராட் கோலி களத்திற்கு வந்தார்.
சச்சினின் சாதனையை கடந்த போட்டியில் ஐந்து ரன்களில் விராட் கோலி தவறவிட்டார்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும்போது விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக விராட் கோலி டக் அவுட் ஆனார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் டாப் ஏழு இடத்தில் விளையாடும் இந்திய வீரர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சோகமான சாதனையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 34 முறை டக் அவுட் ஆன நிலையில் தற்போது இதனை விராட் கோலி சமன் செய்திருக்கிறார். மூன்றாம் இடத்தில் 31 முறை டக் அவுட் ஆகி சேவாக்கும், நான்காம் இடத்தில் ரோகித் சர்மா 30 முறை டக்அவுட் ஆகியும் ஐந்தாவது இடத்தில் கங்குலி 29 முறை டக் அவுட்டாகியும் உள்ளனர். அதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக அதிக முறை விராட் கோலி சோகமான சாதனை படைத்திருக்கிறார்.
இதுவரை விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக 11 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுமுறையும் வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஐந்து முறையும் இலங்கைக்கு எதிராக நான்கு முறையும், தென்னாப்பிரிக்கா நியூசிலாந்துக்கு எதிராக தலா இரண்டு முறையும் டக் அவுட் ஆகி இருக்கிறார்.