சர்வதேச ஒருநாள் போட்டிகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியினர் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் துவங்கவுள்ளது.
பகலிரவு போட்டி குறித்து பேச்சு
இந்த போட்டியை முன்னிட்டு மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுடன் இந்த ஆண்டின் இறுதியில் மோதவுள்ள டெஸ்ட் தொடருடன் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிராகரித்த பிசிசிஐ
கடந்த ஆண்டிலேயே இந்தியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா விடுத்த விண்ணப்பத்தை பிசிசிஐ நிராகரித்தது. அந்தப் போட்டியில் அனுபவம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்பட்டது.
சொந்த மண்ணில் சாதித்த இந்தியா
இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி, இந்தியா -வங்கதேசம் இடையில் முதல் பகலிரவு போட்டியை கடந்த ஆண்டில் சாதித்து காட்டினார்.
விராட் கோலி ஒப்புதல்
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோத தயார் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி உறுதி
டெஸ்ட் போட்டிகளை எந்த வடிவத்தில் விளையாடினாலும் அது உற்சாகத்தை அளிக்கும் என்று கூறியுள்ள விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் கப்பா, பெர்த் என எந்த மைதானத்திலும் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாட இந்திய அணி தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐசிசி 4 நாள் டெஸ்ட் குறித்து ஆலோசனை
கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளுடன் மும்மையில் பிசிசிஐ நேற்று ஆலோசனை மேற்கொண்டது. இதில் ஐசிசியின் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட், ஆண்டு கூட்டம், பகலிரவு போட்டிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.