பெங்களூர்: ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது இடது கையில் புதியதாக ஒரு டாட்டூ பச்சைக்குத்தியுள்ளார். அலியன்ஸ் டாட்டூ இந்தியா எனும் நிறுவனத்தால் இந்த டாட்டூ போடப்பட்டுள்ளது. கோலியின்ள புது டாட்டூ சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெறும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
எனினும், இது இன்னும் முழுமையடையவில்லை என்றும், கோலி தனது பிஸியான அட்டவணையிலிருந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் சில மணிநேரங்களை ஒதுக்கி இதை முடித்து வருவதாகவும் டாட்டூ ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. இந்த டாட்டூ இன்னும் குணமடையவில்லை.

வரும் மார்ச் 28 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் பெங்களூருவின் முதல் போட்டிக்கு கோலி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்த புதிய டாட்டூ வடிவமைப்பு மற்றும் அதன் தனித்துவமான அர்த்தம் குறித்து அந்த நிறுவனம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இது வெறும் உடல் அலங்காரம் என்பதைத் தாண்டி, ஆழ்ந்த தனிப்பட்ட பொருளையும், கோலியின் உள்ளார்ந்த தன்மையையும் பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியின் பல ஆண்டுகால தனிப்பட்ட வளர்ச்சியையும், பயணத்தையும் பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த டாட்டூ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனியான வடிவமைப்பாக இல்லாமல், அவரது கடந்தகால அனுபவங்களையும் தற்போதைய மனநிலையையும் ஒருங்கிணைக்கும் ஒரு கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த கலைஞர்கள் "இந்த டாட்டூ அவரது தனிப்பட்ட பயணத்திலிருந்து உருவானது. அவர் கடந்து வந்த மாற்றங்களையும், எதை எல்லாம் கடந்து வந்தார், எதை எல்லாம் அடைந்தார், மற்றும் அவர் தொடர்ந்து எந்த திசையில் பயணிக்கிறார் என்பதையும் இது பிரதிபலிக்கிறது," என்று குறிப்பிட்டனர். இது விராட் கோலியின் வாழ்வின் அடுத்த கட்ட சிந்தனைகளையும், அவரது மனநிலையின் தெளிவையும் சுட்டிக்காட்டுவதாகவும் எடுத்து கொள்ளலாம்.
இதில், சிவன் உருவத்தால் ஈர்க்கப்பட்ட, முழுமை பெறாத ஒரு பட்டை வடிவ டாட்டூ, அவரது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட பிற டாட்டூக்களும் அடங்கும். காலப்போக்கில், இந்தப் பழைய டாட்டூக்கள் மங்கலாகிவிட்டன. கையின் முன்புறத்தில் மென்மையான செமி-ரியலிசம் என்ற நுட்பமும், பின்புறத்தில் ஸ்டிப்ளிங் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு வடிவியல் பூவும் இடம்பெற்றுள்ளன. இது காட்சியில் பல பரிமாணங்களை சேர்ப்பதுடன், பார்வையாளர்களை ஈர்க்கும் அழகியலையும் வழங்குகிறது.
ட்ரைசெப் மற்றும் தோள்பட்டையின் பின்புறம் மேலே செல்லும்போது, பியோனி மற்றும் தாமரை என இரண்டு தனித்துவமான மலர் இடம்பெற்றுள்ளன. இதில், தாமரை மலர் தனித்துவமான பொருளை உணர்த்துகிறது.தாமரை மலரை "சேற்று நீரில் இருந்து எழுந்து, தான் வளரும் அசுத்தத்தால் பாதிக்கப்படாமல், எந்த சூழலில் இருந்து வந்தாலும் தூய்மையுடன் மலரும் ஒரு மலர்" .

அதை உணர்த்தவே இந்த டாட்டூவை கோலி போட்டுள்ளார். இது அமைதி, நல்லிணக்கம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையின் வலிமையான அடையாளமாகச் செயல்படுகிறது. கோலி தனது வெளிப்புற சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், குணம் மாறாமல் தூய உள்ளத்துடன் இருக்கி வேண்டும் என்பதை இந்த டாட்டூ உணர்த்துகிறது.