பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர் சி பி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றி பெற வேண்டிய இந்த ஆட்டத்தில் ஆர் சி பி வீரர்கள் பேட்டிங் மற்றும் பில்டிங்கில் சொதப்பினர்.
இதனால் கடுப்பான விராட் கோலி, சக அணி வீரர்களை சராசரியாக விமர்சனம் செய்தார். இது குறித்து பேசிய அவர் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த போட்டியை நாங்களே எதிரணிக்கு பரிசாக கொடுத்து விட்டோம். இந்த தோல்வியை அடைவதற்கு தகுதியான நபர்கள் நாங்கள்.

நாங்கள் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரர்களாக இன்று விளையாடவில்லை. பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாகவே செய்தோம். ஆனால் எங்களுடைய பில்டிங் படுமோசமாக இருந்தது. இது நாங்களே அவர்களுக்கு ரன்களை பரிசாக கொடுப்பது போல் ஆகும். ஆட்டத்தில் நாங்கள் முக்கியமான இரண்டு கேட்சுகளை கோட்டை விட்டோம்.
இதுவே எங்களுக்கு 20 முதல் 30 ரன்களை கூடுதலாக அடிக்கும் நிலையை உருவாக்கியது. நாங்கள் பேட்டிங்கில் எப்போதும் நன்றாகவே தொடங்குகிறோம். ஆனால் எளிதாக எங்களுடைய விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம். நாங்கள் ஆட்டம் இழந்த எந்த பந்துமே விக்கெட்டை எடுக்க கூடிய பந்துகள் அல்ல. ஆனால் நாங்கள் பில்டர்களுக்கு நேராக அடித்து ஆட்டம் இழந்து விட்டோம்.
ஒரு பார்ட்னர்ஷிப் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வருகிறது. ஆனால் இன்னொரு ஒரு பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தி விளையாடினால் தான் எங்களால் வெற்றி பெற முடியும். தற்போது நாங்கள் தொடர்ந்து வெளியூரில் விளையாட போகிறோம். அங்கு வெற்றிகளை பெற்று ஒரு அணியாக சிறந்து விளங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். வெளியூரில் வெற்றி பெற்றால் தான் அதிக புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.