IND vs ENG: 15 ஆண்டுகால தாகத்தை தீர்ப்பாரா கோலி? ஜாம்பவான் சாதனையை முறியடிக்க 4 ரன்கள் மட்டுமே தேவை
கார்டிஃப்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கு ராகுல் டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக தள்ளிப் போகும் ஒரு சம்பவத்தை நிகழ்த்துவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி இதுவரை ஒரு ஒருநாள் போட்டி சதம் மட்டுமே அடித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று அந்த சதத்தை அடித்தார். தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள இதே கார்டிஃப் மைதானத்தில் தான் அந்த சதத்தை அடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் 107 ரன்கள் எடுத்திருந்த போது அவர் 'ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தில் அவர் 11 அரைசதங்கள் அடித்திருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 2 சதங்கள் அடித்துள்ளார். தற்போதைய இங்கிலாந்து தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவர் மீண்டும் கார்டிஃப் மைதானத்தில் சதம் அடித்து நீண்ட காலம் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் போக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், இங்கிலாந்து மண்ணில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் வெறும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ராகுல் டிராவிட் இங்கிலாந்து மண்ணில் 46 போட்டிகளில் ஆடி 2645 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 58 போட்டிகளில் 2642 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்னும் 4 ரன்கள் எடுத்தால் டிராவிட்டை முந்தி கோலி முதலிடத்தைப் பிடிப்பார். சச்சின் டெண்டுல்கர் 2626 ரன்களுடன் 3வது இடத்திலும், ரோஹித் சர்மா 2298 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

