மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டில் தான் விராட் கோலி கடைசியாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் ஊசி செலுத்தி கொண்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இந்த நிலையில். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலியின் பெயரை அணியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே விராட் கோலி டெல்லி மாநில வீரர்களுடன் இணைந்து வலைப் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என டெல்லி மாநில கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
விராட் கோலி விளையாட மறுத்ததால் கழுத்து வலி என்ற காரணம் சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி இருக்கிறதா? என சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் போனால் அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ள 10 புதிய விதிகளுக்கான அறிக்கையில் ஒரு முக்கிய விஷயத்தை சுட்டி காட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி எந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையோ, அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் தொடரிலும் கூட அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான், விராட் கோலிக்கு கழுத்து வலியால் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த காரணத்தை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளுமா? இல்லையா? விராட் கோலி 13 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி டிராபியில் விளையாடுவாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.