டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். டெல்லி - குஜராத் இடையேயான பரபரப்பான போட்டியில், உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் தனது 1000 ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த சாதனையை அவர் கர்நாடகாவின் தேவ்தத் படிக்கல்லுடன் பகிர்ந்து கொள்கிறார்.
விஜய் ஹசாரே டிராபி 2025-26 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய கோலி, முதல் இரண்டு எலைட் குரூப் டி போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிசம்பர் 24 அன்று ஆந்திரப் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், 299 ரன் இலக்கை துரத்தி, மூன்றாம் நிலை வீரராகக் களமிறங்கி 101 பந்துகளில் 131 ரன்களை அதிரடியாக அடித்தார்.

டிசம்பர் 26 அன்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், கோலி 61 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். இந்த ஆட்டத்தில்தான் விஜய் ஹசாரே டிராபியில் தனது 1000 ரன்கள் என்ற மைல்கல்லை நிறைவு செய்தார். டெல்லி அணி இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே டிராபி வரலாற்றில், 1000 ரன்கள் குவிக்கும் கிளப்பில் வெறும் 15 இன்னிங்ஸ்களில் இணைந்ததன் மூலம் கோலி சாதனை படைத்துள்ளார். இந்த ஒருநாள் உள்நாட்டுப் போட்டித்தொடரில் அவர் மொத்தமாக 1027 ரன்களை குவித்துள்ளார். கர்நாடக இடது கை துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கலும் இதே 15 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது கோலி அவரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தேவ்தத் படிக்கல், 2019 செப்டம்பர் 26 அன்று பெங்களூரில் ஜார்கண்டுக்கு எதிராக கர்நாடகா அணிக்காக தனது லிஸ்ட் ஏ அறிமுகப் போட்டியில் களமிறங்கினார். விஜய் ஹசாரே டிராபியில் 31 ஆட்டங்களில் 2304 ரன்களை எடுத்திருந்தார். மொத்தமாக 36 லிஸ்ட் ஏ போட்டிகளில் 2364 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 81.51 ஆகவும், 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
இடது கை\ வீரரான தேவ்தத் படிக்கல், இந்திய அணிக்காக இதுவரை இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியான அவரது சிறப்பான செயல்பாடு, சர்வதேச அரங்கில் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் வீரராக அவரை அடையாளப்படுத்துகிறது.
டெல்லி அணியின் எலைட் குரூப் டி பிரிவில் டிசம்பர் 29 அன்று சௌராஷ்டிராவுக்கு எதிராக அலூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவர் இல்லாதபோதும் அணி சீராக செயல்பட்டு வருகிறது. கோலியின் அடுத்த போட்டி குறித்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜனவரி 6, 2026 அன்று பெங்களூரில் ரயில்வேஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெல்லியின் ஆறாவது குரூப் போட்டியில் விராட் கோலி மீண்டும் களமிறங்குவார். கடந்த போட்டியில் கிடைத்த ஓய்வுக்குப் பிறகு, அவர் இந்தப் போட்டியில் புத்துணர்ச்சியுடன் களம் காணவுள்ளார். கோலியின் வருகை அணிக்கு பெரும் பலத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மற்றும் ரயில்வேஸ் இடையேயான இந்தப் போட்டியில் கோலி பங்கேற்பார் என்ற செய்தி, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) தலைவர் ரோஹன் ஜேட்லியால்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி, ஆரம்ப காலத்திலேயே இந்திய அணிக்கு விளையாட தொடங்கிவிட்டதால், அவரால் பெரிய அளவு விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்க முடிந்தது இல்லை. ஆனால், விஜய் ஹசாரே தொடரில் விளையாடிய சில இன்னிங்சிலேயே அவர் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது