பெங்களூர்: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது. ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, டாஸ் போடுவதற்குச் சற்று முன்பாக எல்லைக் கோட்டுக்கு அருகே தனது முன்னாள் சக வீரர்களான டேல் ஸ்டெய்ன், அனில் கும்ப்ளே மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அனில் கும்ப்ளே அருகே சென்ற விராட் கோலி அவரை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக்கொண்டார்.
இவர்களின் இந்தச் சந்திப்பு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்றால், கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக கோலியும், பயிற்சியாளராகக் கும்ப்ளேவும் இருந்தபோது இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. கும்ப்ளேவின் கண்டிப்பான பயிற்சி முறை கோலிக்கும், அணியின் மற்ற வீரர்களுக்கும் ஒத்துவரவில்லை எனக் கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோது, கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போது கும்ப்ளே வெளியிட்ட அறிக்கையில், "கேப்டனுடனான எனது உறவு தொடர முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது" எனப் பகிரங்கமாகத் தெரிவித்து வெளியேறினார். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன்பிறகு இருவரும் பொதுவெளியில் சந்தித்துக்கொண்டாலும், தற்போது நடந்தது போன்ற ஒரு நெருக்கமான சந்திப்பு நிகழவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய கசப்பான சம்பவங்களை முழுமையாக மறந்து இருவரும் இன்று மைதானத்தில் சிரித்துப் பேசியது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. இருவரும் முதிர்ச்சியுடன் பழைய பிரச்சனைகளைக் கடந்துவிட்டதை இந்தச் சந்திப்பு உறுதி செய்தது.

இதேபோல், தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், கோலியின் பெயர் பொறித்த பழைய இந்திய ஜெர்சியைக் கொண்டு வந்து அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த கோலி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அதில் கையெழுத்திட்டார். இந்தப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.