லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி தனது குடும்பத்துடன் லண்டனில் செட்டிலாக ஆர்சிபி அணியே காரணமாக அமைந்துள்ளது. ஆர்சிபி அணியின் உரிமையாளருடன் ஏற்பட்ட நட்பும், அங்கு விராட் கோலி செய்துள்ள முதலீடுகள் காரணமாகவே லண்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இனி வரும் காலங்களில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவும் மட்டுமே ஆடுவார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

குறிப்பாக தனது மகள் வாமிகா மற்றும் மகன் அகாய் ஆகியோருடன் நேரம் செலவிடுவதற்காக லண்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளார். 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக லண்டனில் முகாமிட தொடங்கினார். இதற்கு பின்னணியில் ஆர்சிபி அணி தான் காரணமாக உள்ளது. ஏனென்றால் ஆர்சிபி அணியின் உரிமையாளர் டியாஜியோவுடன் விராட் கோலிக்கு நட்பு ஏற்பட்டது.
லண்டனில் வாழ்ந்து வரும் டியாஜியோவுடன் விராட் கோலி பழக தொடங்கியதால், லண்டனில் அதிக நேரம் செலவிட்டு வந்தார். அப்போது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோரையும் அழைத்து செல்வது வழக்கமாகியது. ஒரு கட்டத்தில் லண்டன் வாழ்க்கை முறை அவர்களுக்கு பிடித்துப் போக, விராட் கோலி அங்கேயே செட்டிலாக முடிவு எடுத்தார்.
இதன்பின் லண்டனில் உள்ள நாட்டிங் ஹில் பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஸ்கொயர் ஃபூட்டுக்கு ஒரு வீட்டை வாங்கிய விராட் கோலி, அங்கேயே தனது தொழில் முதலீடுகளையும் செய்ய தொடங்கினார். அண்மையில் கூட தனது நீண்ட நாள் மேலாளர் உடனான உறவை முறித்துக் கொண்ட விராட் கோலி, தனது பெயரிலேயே புதிய நிறுவனத்தை இந்தியா மற்றும் லண்டனில் தொடங்கினார்.
தற்போது லண்டனில் இருந்து வரும் வருமானத்தை லண்டனிலேயே முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார் விராட் கோலி. இதனால் முதலில் வாமிகாவின் படிப்புக்காக மீண்டும் மும்பைக்கு திரும்ப அனுஷ்கா சர்மா திட்டமிட்டிருந்தார். மும்பையில் அம்பானி குடும்பம் நடத்தி வரும் சர்வதேச பள்ளியில் வாமிகாவை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
ஆனால் விராட் கோலி லண்டனில் இருந்து மீண்டும் இந்தியா திரும்ப விரும்பாததால், வாமிகாவின் படிப்பை லண்டனிலேயே தொடங்க முடிவு எடுத்திருக்கிறார். வாமிகாவுக்கு 4 வயது கடந்துவிட்ட நிலையில், லண்டனில் அடுத்த ஆண்டு முதல் பள்ளிப் படிப்பை தொடங்க விராட் கோலி ஆலோசித்திருக்கிறார். இதனிடையே மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கான பயிற்சியையும் விராட் கோலி தொடங்கியுள்ளார்.