டெல்லி: இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபி போட்டியில் விளையாட இருக்கிறார். அதற்காக டெல்லி மாநில கிரிக்கெட் அணியுடன் அவர் இணைந்து இருக்கிறார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி விளையாட உள்ள நிலையில், அந்தப் போட்டியில் விராட் கோலி பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே விராட் கோலி ஆடும் போட்டி என்பதால் டெல்லியில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அனைவரும் விராட் கோலியை நேரில் பார்ப்பதற்காக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு கூட்டம், கூட்டமாக வரத் துவங்கி உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக விராட் கோலி அங்கு பயிற்சி செய்த நிலையில் அவரை பார்ப்பதற்கு ஊடகத்தினர் மற்றும் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் வந்ததாக கூறப்படுகிறது. விராட் கோலி பயிற்சி செய்வதால் அருண் ஜெட்லி மைதானத்தின் நிர்வாகிகள் காவல் துறையினரின் உதவியை நாடி இருந்தனர்.
முதலில் சில நூறு பேர் வருவார்கள் என நினைத்து காவல்துறை குறைந்த அளவிலான காவலர்களை மட்டுமே பாதுகாப்பு பணிக்கு அனுப்பி இருந்தது. அங்கு வந்த காவல் துறை உதவி ஆய்வாளர் பிரதீப் ராணா மைதானத்தின் வாயிலில் நின்றிருந்த ஊடகத்தினர் மற்றும் கேமரா மேன்களின் எண்ணிக்கையை மட்டுமே பார்த்து பரபரப்படைந்தார்.
அப்போதே தனது மூத்த அதிகாரிகளுக்கு இந்த விவரத்தை பகிர்ந்த அவர், நிச்சயமாக கூடுதல் காவலர்கள் தேவை என தகவல் அனுப்பினார். பயிற்சிக்கே இந்த அளவுக்கு கூட்டம் கூடி இருக்கும் நிலையில், விராட் கோலி ஆடும் ரஞ்சி போட்டியை காண்பதற்கு சுமார் 10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சர்வதேச போட்டிக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமோ, அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே இந்த போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடு நிகழலாம் என்ற அச்சத்தில் இருக்கும் பிசிசிஐ அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறது.
டெல்லி - ரயில்வேஸ் அணிகள் ஆடும் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாமல் போனால் விராட் கோலியை பார்க்க வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் மைதானத்திற்கு வர முயல்வார்கள். எனவே, மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்திருக்கும் பிசிசிஐ, இந்த போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்து இருக்கிறது.
கடந்த வாரம் வரை டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதும் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆனால், தற்போது விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது. ஜியோ சினிமா விராட் கோலி ஆடும் போட்டியை ஒளிபரப்பும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.