உங்கள் கனவுக்கு உண்மையாக இருங்கள்! 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் இருங்கள்.. மாணவர்களுக்கு கோலி அறிவுரை
டெல்லி: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி டெல்லி டிபிஎஸ் ஆர்.கே. புரம் பள்ளியில் மாணவர்களுடன் உரையாற்றினார். பள்ளி நிகழ்ச்சிகளில் பேசுவது தனக்கு சங்கடமாக இருந்தாலும், பள்ளி ஒருவரை சிறந்த மனிதராக்கும் என அவர் வலியுறுத்தி, இளைஞர்களுக்கு அறிவுரையை வழங்கினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தியது. ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியிலும் கோலி மாணவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்கினார். பள்ளி மற்றும் ஆசிரியர்களை மதிக்கவும், இளம் வயதிலேயே இலக்குகளில் கவனம் செலுத்தவும் மாணவர்களிடம் கோலி வலியுறுத்தினார்.

"நான் பள்ளிகளில் பேசுவதற்குப் பழக்கமில்லை, கிரிக்கெட்டிற்காக வெகு காலத்திற்கு முன்பே பள்ளி அமைப்பிலிருந்து விலகிவிட்டேன். அதைப் பற்றித்தான் நான் பேசப்போகிறேன் என்பதால் இது எனக்குச் சற்று சங்கடமாக இருக்கும்," என அவர் தெரிவித்தார்.
"நான் ஒரு பள்ளியின் சூழலைப் புரிந்துகொள்கிறேன். நீங்கள் இப்போது இருக்கும் அதே காலகட்டத்தை நான் கடந்து வந்திருக்கிறேன். என் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே எனது கவனமும் முன்னுரிமையும் எவ்வாறு மாறின என்பதை எனது அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்ள முடியும்," என்றார்.
கிரிக்கெட்டைத் தன் தொழிலாகத் தேர்வு செய்தபோது தனக்கு நேர்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கோலி விவரித்தார். மாணவர்களும் தங்கள் கனவுகளை முழு அர்ப்பணிப்புடன், நேர்மையாகப் பின்பற்ற வலியுறுத்தினார்.
தனது அனுபவத்தை பற்ற பேசிய கோலி, "நான் என் வாழ்க்கையின் மிக ஆரம்பத்திலேயே விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன். அது நேர்மையான இடத்திலிருந்து வந்தது. கிரிக்கெட்டைத் தொடர நான் உறுதியாக இருந்தேன், இந்த முடிவை குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க நான் நேர்மையாக இருக்க வேண்டியிருந்தது," என்றார்.
நிறைவாக, கோலி, "உங்கள் கனவுகளுடன் நேர்மையாக இருங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்து, அந்தக் கனவை முழு அர்ப்பணிப்புடன் பின்பற்றுங்கள். நீங்கள் 100% நேர்மையாக இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்," என அழுத்தமாக எடுத்துரைத்தார்.


Click it and Unblock the Notifications

