மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகஸ்ட் 18ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் விராட் கோலி தொடக்க வீரராக கம்பீர உடன் விளையாடினார்.
அந்த ஆட்டத்தில் 22 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி மொத்தமாக 12 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 54 என்ற அளவில் இருந்தது. விராட் கோலி விளையாடிய முதல் போட்டியில் இந்திய அணி 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்த காட்சியை அப்படியே கட் செய்து இன்று பார்த்தால் உலக கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரர், சர்வதேச அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர், விளையாட்டு உலகில் மிகப்பெரிய பணக்காரர் யாராலையும் முடியாது என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சினின் ஒரு நாள் சதம் சாதனையை முறியடித்தவர் என்று பல ரெகார்டுகளை விராட் கோலி படைத்திருக்கின்றார்.
சாதாரண சிறுவனாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த விராட் கோலி பல்வேறு சோதனைகளை சாதனையாக்கி இருக்கின்றார். கடின உழைப்பு, சாதித்து காட்டுவேன் என்ற மன உறுதி, போராட்ட குணம் தான் விராட் கோலியை இன்று இத்தகைய சாதனைகளை படைக்க காரணமாக அமைந்தது. இந்த நிலையில் விராட் கோலி 17 ஆண்டுகளை நாளை உடன் நிறைவு செய்ய உள்ளார்.
இந்த தருணத்தில் விராட் கோலிக்கு தற்போது மிகப்பெரிய அழுத்தம் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் சிறப்பாகவே விளையாடி வருகிறார். இதற்கு உதாரணம் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதனால் விராட் கோலி 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் பி சி சி ஐ, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களை வெளியே அனுப்ப திட்டமிட்டு வருகிறது. இதனால், கோலிக்கு மறைமுக அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட், டி20 விக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவாரா? தன்னுடைய சாதனை பயணத்தை முடித்துக் கொள்வாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை விராட் கோலி நிறைவு செய்வாரா? என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. இதற்கான பதில் விராட் கோலியின் மனநிலையை பொறுத்து இருக்கின்றது.