மெல்போர்ன் : என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆஸ்திரேலிய செய்தியாளர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் மூன்று டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தனா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தற்போது மெல்போர்ன் வந்தடைந்தனர்.

விராட் கோலி தனது குடும்பத்தினருடன் மெல்போர்ன் வந்தடைந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியா செய்தியாளர்கள், விராட் கோலி குடும்பத்தினரை வீடியோ எடுக்க முற்பட்டனர். அப்போது இதை பார்த்து கடுப்பான விராட் கோலி, என்னுடைய அனுமதி இன்றி என்னுடைய குடும்பத்தினரை புகைப்படம், வீடியோ எடுக்காதீர்கள்.
எங்களுக்கு கொஞ்சம் பிரைவசி தேவை என்று விராட் கோலி கோபமாக கூறினார்.இதனால் அங்கு நின்ற ஆஸ்திரேலியா ஊடக நிபுணர்கள் விராட் கோலி உடன் கோபமாக பேசினர். இதனை அடுத்து அங்கு இருந்த பெண் செய்தியாளர் ஒருவரிடம் விராட் கோலி கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் விமான நிலையத்தில் ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிப்பு கேட்டார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விராட் கோலி கூறிய உடனே ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் புகைப்படம் வீடியோ எடுப்பதை நிறுத்தாதது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விராட் கோலியை கோபப்படுத்தி அவருடைய கவனத்தை சிதறடிக்க வேண்டும் என்ற பாணியில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் விராட் கோலியின் மகள் வீடியோ ஒன்று வைரலானது. அப்போது விராட் கோலி இந்த வீடியோவை உடனே நீக்கி விடுங்கள் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்ததை எடுத்து அது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.