சந்திகார்: ஐபிஎல் தொடரில் தனது ஆதர்ச நாயகனான விராட் கோலியை அவுட் செய்தால், அவரது கால்களைத் தொட்டு மரியாதை செலுத்துவேன் என பஞ்சாப் கிங்ஸ் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஷால் நிஷாத் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், பஞ்சாப் கிங்ஸ், யுபிடி 20 லீக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் விஷால் நிஷாத்தை ஒப்பந்தம் செய்தது. உள்நாட்டு கிரிக்கெட் அனுபவமின்றி உள்ள இந்த வீரருக்கு அரிய வகையில் கிடைத்த இந்த ஒப்பந்தம் பெரும் கவனத்தைப் பெற்றது.
கோரக்பூரைச் சேர்ந்த ஓவியரின் மகன், 20 வயது நிஷாத். சாதாரண பின்னணியிலிருந்து வந்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் லெதர் பந்தில் விளையாடத் தொடங்கினார். தனது தந்தை மற்றும் சகோதரர்களைப் போலவே, ஆரம்பத்தில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டையே ஆடினார்.உலகின் மிகப்பெரிய டி20 லீக்கில் தனது திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் நிஷாத், விராட் கோலியை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளார்.

"என் ஹீரோ விராட் கோலிதான். அவரது அணுகுமுறையும் உத்வேகமும் எனக்கு வழிகாட்டியாக உள்ளது. அவர் என் மிக விருப்பமானவர்," என நிஷாத் கூறினார்.விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினால் எப்படி கொண்டாடுவார் என்பதையும் இந்த இளம் வீரர் விளக்கினார். "நான் அவரது விக்கெட்டை எடுத்தால், அவர் என் லட்சிய நாயகன் என்பதால், நிச்சயம் அவரது கால்களைத் தொட்டு மரியாதை செலுத்துவேன்," என்று பதில் அளித்தார்.
₹30 லட்சம் மதிப்பிலான ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான நிஷாத்தின் பயணம் சவால்கள் நிறைந்தது. ஒருகட்டத்தில் கிரிக்கெட்டைக் கைவிடவும் அவர் யோசித்தார். “கடுமையான காலங்கள் இருந்தன. அப்பாவுடன் வேலைக்குச் செல்வேன். கிரிக்கெட்டை விட்டுவிடலாமா என்று கூட நினைத்தேன்," என நிஷாத் நினைவுகூர்ந்தார்.
“கிரிக்கெட் வீரராக ஆவது மிகவும் கடினம் என்பதால், கிரிக்கெட்டை விட்டுவிட்டு வேறு எதையாவது கற்குமாறு என் அம்மா கூறினார். ஆனால் நான் வருத்தப்படவில்லை. 'அம்மா, நான் இதை நிச்சயம் சாதிப்பேன்' என்றேன். என் உறுதியைப் பார்த்த பிறகு என் குடும்பம் எனக்கு ஆதரவாக நின்றது,” என அவர் நெகிழ்ந்தார்.
“ஆரம்பத்தில் டென்னிஸ் பந்து ஆடியபோது, என் பந்துவீசும் முறையைப் பார்த்த நண்பர் லெதர் பந்தை முயற்சிக்கச் சொன்னார். அதன் பிறகுதான் நான் தீவிரமாகப் பயிற்சி செய்ய முடிவு செய்தேன். டென்னிஸ் பந்துத் திறமைகளை லெதர் பந்துக்கு மாற்றியபோது, நான் பந்துவீச்சாளராக உருவெடுத்தேன். என் பயிற்சியாளர் மூன்று வருடங்கள் என்னிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் டி20 போட்டியில் சிறப்பாக ஆடி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையும் வாய்ப்பு கிடைத்தது,” என நிஷாத் குறிப்பிட்டார்.