மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்ட விதத்தைப் பற்றியும், தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் தனது கருத்துகளைப் பகிர்ந்தார். கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணனையாளராக மாறிய அவர், கோலி தனது தீவிர ஆளுமையைக் களத்தில் குறைத்தால், அவர் அதே வீரராக இருக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
2011 உலகக் கோப்பை வெற்றி அணியில் கோலியுடன் இணைந்து விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கோலியின் ஆக்ரோஷமான நடத்தை தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்தினார். கோலியின் கள நடத்தை குறித்து பேசிய அவர்,ஆக்ரோஷத்திற்கும் ஆர்வத்திற்கும் இடையே தெளிவான வேறுபாட்டை எடுத்துரைத்தார்.

அதில்,"எதையும் மாற்ற வேண்டுமா என்று கேட்டால், எதுவும் இல்லை. மற்றவர்கள் ஆக்ரோஷம் என்று அழைப்பது, நான் ஆர்வம் என்று அழைப்பேன். விராட் கோலி ஆக்ரோஷமானவரா? இல்லை. அவர் ஆர்வத்துடன் இருப்பவர் என்று நினைக்கிறேன். விராட்டின் ஆக்ரோஷம் அதிகம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஆனால், அவர் அந்த ஆக்ரோஷத்தைக் குறைத்தால், அவர் அதே வீரராக இருக்க மாட்டார்," என்று ஸ்ரீசாந்த் கூறினார்.2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, இரு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைப் பயணங்கள் வெவ்வேறு திசைகளில் சென்றன. கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் அறிமுகமானார்.
ஆனால் ஸ்ரீசாந்த் அந்தத் தொடரில் இடம்பெறவில்லை. ஸ்ரீசாந்தின் கடைசி டெஸ்ட் ஆட்டம் 2011இல் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் நடந்தது. இதே போன்று, 2008இல் தனக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் இடையே நடந்த சம்பவத்தைப் பற்றியும் ஸ்ரீசாந்த் பேசினார்.
"நான் என் மகளிடம், 'இது பாஜ்ஜி பா, அவர் என்னுடன் விளையாடியவர்' என்று சொன்னபோது, அவள் உடனே, 'இல்லை, இல்லை, நான் ஹாய் சொல்ல மாட்டேன்' என்று கூறினாள். எனக்கு ஏன் என்று புரியவில்லை. பள்ளியில் இது பற்றி சில உரையாடல்கள் நடந்திருக்கலாம்."
"பின்னர் நாங்கள் விளக்க முயன்றோம், ஆனால் அவள் இன்னும் பேச மாட்டேன் என்று கூறினாள். மறுநாள், லெஜெண்ட்ஸ் தொடர் நடந்தபோது, அவர் எங்கள் அண்ணன் மாதிரி என்று விளக்கினோம். பாஜ்ஜி பா அதை வேண்டுமென்றே செய்ததாக நான் நினைக்கவில்லை. அது திடீரென நடந்தது. இது எங்களிருவருக்கும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது," என்று அவர் கூறினார்.
42 வயதான ஸ்ரீசாந்தின் சர்வதேச வாழ்க்கை உலகக் கோப்பைக்குப் பிறகு முடிவடைந்தது, அவரது கடைசி ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதி ஆட்டமாக இருந்தது. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் வலுவான ஆட்டங்களுடன் திரும்பினார், ஆனால் அது ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்கு மீண்டும் வரவோ போதுமானதாக இல்லை.