கொல்கத்தா: சர்வதேச கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனான விராட் கோலி தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் அவர் கூறிய வார்த்தையையும், அவரது செயல்பாடுகளை பற்றியும் பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றுவிட்டு, இந்திய அணி வீரர்கள் அனைவரும் சச்சின் டெண்டுல்கரை தங்களது தோளில் வைத்து தூக்கி கொண்டாடி வான்கடே மைதானத்தை சுற்றி வந்தனர். அப்போது ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் என்று பல்வேறு தோள்களில் சச்சின் டெண்டுல்கர் மாற்றப்பட்டு வந்தார். ஆனால் ஒரேயொரு வீரர் மட்டும் சச்சின் டெண்டுல்கரை கடைசி வரை கீழே இறக்காமல் இருந்தார்.

அந்த வீரர் தான் விராட் கோலி. ஏன் சச்சின் டெண்டுல்கரை தூக்கி கொண்டு வலம் வந்தீர்கள் என்ற எழுப்பிய கேள்விக்கு, 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டை தனது தோளில் சுமந்த சச்சின் டெண்டுல்கரை நாங்கள் சுமக்கிறோம் என்று கூறினார். ஆங்கிலத்தில் "Passing the Baton" என்று சொல்வார்கள். அதாவது தனது பொறுப்பையும், பணியையும் சரியான வீரர்களிடம் ஒப்படைப்பதை தான் அப்படி கூறுவார்கள்.
அன்றைய நாளில் அதுதான் நடந்தது என்று கூறலாம். ஆனால் பொறுப்பை யாரும் கொடுக்காமல் விராட் கோலியே அந்த பொறுப்பை தானாகவே முன் வந்து எடுத்து கொண்டார். சச்சினின் இடத்தை நிரப்ப முடியுமா, சச்சின் ஏற்படுத்திய தாக்கத்தை கொடுக்க முடியுமா, சச்சினை போல் அனைத்து மைதானங்களிலும் ரன்கள் சேர்க்க முடியுமா, 100 சதங்களை எட்ட முடியுமா என்ற கேள்விக்கு பேட்டின் மூலமாக பதில் அளித்துக் கொண்டே இருந்தார்.. இருக்கிறார்..
விராட் கோலி அறிமுகமான நாளில் இருந்து எந்த கொம்பனும் அவரை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே அதற்கான சாட்சியாகும். கொரோனா பரவலின் போது நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின் போது விராட் கோலியால் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அப்போது பலரும் விராட் கோலி நிச்சயம் ஃபார்முக்கு வருவார். ஆனால் மீண்டும் பழைய விராட் கோலியை பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
அதேபோல் விராட் கோலி ஃபார்மை இழந்ததற்கு ரசிகர்களும் ஒரு காரணமாக தான் இருக்கின்றனர். ஏனென்றால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்காகவும், கரகோஷத்திற்காகவும் கிரிக்கெட் கொண்டாடி மகிழ்ச்சியுடன் விளையாடும் விராட் கோலிக்கு, மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஆடியது தான் ஃபார்மை தொலைத்ததற்கான காரணம். மீண்டும் மைதானத்திற்கு ரசிகர்கள் வந்த பின், விராட் கோலி பீஸ்ட் மோடில் ஃபார்முக்கு வந்ததை அனைவரும் பார்த்து வருகிறோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்த தூதுவன் என்று விராட் கோலியை ஆஸ்திரேலிய மீடியாக்களும் கொண்டாடுகின்றன. ஆனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சச்சினுக்கு பின் இந்திய கிரிக்கெட்டை காக்க வந்த தூதுவன். அந்த தூதுவனால் தான் இந்தியாவுக்கு மீண்டும் உலகக்கோப்பையை வென்று கொடுக்க முடியும். அந்த உலகக்கோப்பையை வென்ற பின் சச்சினை விராட் கோலி கொண்டாடியதை போல் விராட் கோலியை இளம் வீரர்கள் கொண்டாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.