சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, களத்தில் இரு அணி கேப்டன்களும், நண்பர்கள் போல சில நொடிகள் உரையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டம் இன்று நடந்து முடிந்திருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது.. நல்லா வச்சு செய்திருக்கிறது இங்கிலாந்து. 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள். அதுவும் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்.
வெளுத்து வாங்கிய வெயில், Dry பிட்ச், நாம் ஒன்று நினைத்தால் பந்து ஒன்று நினைக்கும் தருணங்கள் என எல்லாம் சேர்ந்து, இன்றைய முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கானது அல்ல என்பதை சொல்லிவிட்டது.

'அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்வளவு சேதாரம்-னா அடி வாங்குனவன் இந்நேரம் உயிரோட இருப்பாங்குற?' என்ற பழமொழிக்கு ஏற்ப, டாப் ஃபார்மில் இருக்கும் அஷ்வினின் பந்துகளே, 'புஜுக்கு புஜுக்கு' சொல்லிக் கொண்டிருந்த போது, ஷாபாஸ் நதீம், வாஷிங்டன் சுந்தரின் பந்துகள் என்ன சொல்லியிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
ஜோ ரூட் கேஷுவலாக சதம் அடித்து 128 ரன்களுடன் களத்தில் நிற்க, கடைசி ஓவரில் சிப்ளே 87 ரன்களில் அவுட்டானார். சந்தித்த பந்துகள் 286. இந்தியா சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஒருபக்கம் இந்திய பவுலர்களின் விரல்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் துக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாத இந்திய கேப்டன் கோலி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உடன் கிட்டத்தட்ட அரைநிமிடம் உரையாடும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வர்ணனை செய்து கொண்டிருந்த நிக் நைட், 'மாபெரும் இரு கிரிக்கெட் வீரர்கள் அப்படி என களத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய பேராவலோடு உள்ளேன்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.