மும்பை: 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த டி20 தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான இன்னிங்ஸை ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
இதன் காரணமாக ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை பார்படாஸில் இருந்து டெல்லி வந்த இந்திய வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவருடன் காலை உணவருந்திய நிலையில், பின்னர் இந்திய அணி மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது.

இதன்பின் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் வெற்றிப் பேரணியில் ஈடுபட்டனர். மும்பையின் மெரைன் ட்ரைவ் பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், இந்திய வீரர்களின் திறந்தவெளி பேருந்து ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. இந்திய வீரர்களை டி20 உலகக்கோப்பையுடன் பார்ப்பதற்காக மரத்தில் ஏறி இந்திய ரசிகர்கள் சாகசங்களில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வெற்றிப் பேரணிக்கு பின், இந்திய அணி வான்கடே மைதானத்தை அடைந்தது. இதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வான்கடே மைதானத்தில் கூடிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்திய வீரர்கள் வலம் வந்தனர்.
அப்போது விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து டான்ஸ் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கே கிட்டத்தட்ட இரவு 9.30 மணியானது. இதன்பின் இந்திய வீரர்கள் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் விராட் கோலி இந்திய ஜெர்சியை கழற்றிவிட்டு, மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்கையில், மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகா, மகன் அகாய் ஆகியோர் லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஆடிய போட்டியின் போது அனுஷ்கா சர்மா அமெரிக்கா வந்திருந்தார். இதன்பின் அனுஷ்கா சர்மா இந்தியாவுக்கு திரும்பவில்லை. இதனால் மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பதற்காக விராட் கோலி உடனடியாக லண்டனுக்கு புறப்பட்டுள்ளார்.
பார்படாஸில் இருந்து 16 மணி நேரம் தொடர் பயணத்திற்கு பின் இந்திய அணி டெல்லிக்கு வந்தது. அங்கு பிரதமரை சந்தித்து அடுத்த 4 மணி நேரத்தில் மீண்டும் மும்பைக்கு வந்தது. அதன்பின் வெற்றிப் பேரணி, டான்ஸ் என்று விராட் கோலி கொண்டாடிய நிலையில், கொஞ்சம் கூட ஓய்வே எடுக்காமல், லண்டன் புறப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.