மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் சிலர் நாளை காலை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர்.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இரு இடங்களை பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. புஜாரா மட்டுமே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனமாக உள்ளார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் சில போட்டிகளில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரின் அழுத்தம் யாருக்கும் ஒரு போட்டியில் கூட ஓய்வு வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும் ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களில் இந்திய அணிக்கு தேர்வானவர்களை முன்னதாகவே இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் 3 பிரிவுகளாக இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர். அதன்படி முதல் கட்டமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நாளை காலை 4.30 மணிக்கு இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர்.
அங்கு செல்லும் இந்திய வீரர்களில் பயிற்சியில் பங்கேற்பதோடு, சில பயிற்சி போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து குவாலிஃபயர் சுற்றின் 2 போட்டிகள் முடிவடைந்த பின், அடுத்தக்கட்டமாக சில வீரர்கள் பயணிக்க உள்ளனர். ஐபிஎல் தொடர் முடிவடைவதற்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கவனம் செலுத்துவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.